KSRTC..ஒரே பெயருக்கு கர்நாடகாவும், கேரளாவும் போட்டி..7 வருடம் நடந்த வழக்கில் யார் ஜெயிச்சா தெரியுமா?
பெங்களூர்: கேஎஸ்ஆர்டிசி (KSRTC) என்ற பெயரை யார் பயன்படுத்துவது தொடர்பாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கேரள அரசு போக்குவரத்து கழகம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வந்த சட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கேரள அரசுதான் இந்த காப்புரிமை பெற்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என்று காப்புரிமை டிசைன் மற்றும் டிரேட்மார்க் கண்ட்ரோலர் ஜெனரல் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அருகருகே அமைந்துள்ள இரண்டு தென்மாநில போக்குவரத்து கழகங்கள் ஒரே பெயரை எப்படி பயன்படுத்துகின்றன என்ற குழப்பம் பயணிகளுக்கு நீண்டகாலமாக இருக்கக் கூடியது தான். ஆனால் இது தொடர்பாக 7 வருடங்களாக காப்புரிமை டிசைன் மற்றும் டிரேட்மார்க் கண்ட்ரோலர் ஜெனரலில் வழக்கு நடைபெற்று வந்தது பலருக்கும் தெரிந்திருக்காது.
தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
விசாரணையின் முடிவில் ஜூன் 2ம் தேதி முதல் கேஎஸ்ஆர்டிசி என்ற பெயரை கேரள அரசு போக்குவரத்து கழகம் பயன்படுத்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம், கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் லட்சுமண் சவதி தங்களுக்கு இதுபோன்ற எந்த உத்தரவும் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சர் கோபம்
உடனடியாக கேஎஸ்ஆர்டிசி என்ற பெயரை கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் மாற்றிக் கொள்ளாது என்று தெரிகிறது. அமைச்சர் லட்சுமண் சவதி மேலும் கூறுகையில், இது போன்ற சர்ச்சைகள் தேவையில்லாமல் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு தான் இது போல பெயர் சிக்கல்கள் ஏற்படும். வருவாயில் பாதிப்பு ஏற்படும் என்ற கவலை இருக்கும். ஆனால் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கேரள அரசு போக்குவரத்து கழகம் இடையே இதுபோல மோதல் போக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது.
மக்கள் சேவை
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் அரசு போக்குவரத்து கழகங்களின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். அதிகப்படியாக லாபம் எதிர்பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்வதுதான் இந்த இரு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் செய்துவருகின்றன. இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே இதை ஒரு கவுரவ பிரச்சினையாக எந்த ஒரு மாநிலமும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதில் கேரளா கொண்டாடுவதற்கு எதுவும் கிடையாது. இன்னொரு மாநில அரசு சூட்டியுள்ள பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இத்தோடு பிற மாநிலங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மாநிலங்களிடையே நல்ல உறவை பாதுகாப்பது தான் முக்கியம். பெயருக்காக இப்படி சண்டை போடுவது அவசியமற்றது என்று தெரிவித்துள்ளார்.
சின்னங்கள் வேறு
கேரள அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் ஆகியவை ஒரே மாதிரி பெயரைக் கொண்டிருந்தாலும், அவற்றில் இருக்கக்கூடிய சின்னங்கள் மாறுபட்டவை. கேரள சின்னத்தில் இரண்டு யானைகள் படம் இடம் பெற்றிருக்கும், அதேநேரம் கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் சின்னத்தில் இருபுறமும் பறவை உற்று நோக்குவது போன்ற சின்னம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள பாரம்பரியம்
கேரள அரசு போக்குவரத்து கழகம் நீண்ட பாரம்பரியம் கொண்டது. நாட்டிலேயே மிக பழமையான பொது போக்குவரத்து கழகம் என்ற புகழுக்கு சொந்தக்காரர் அந்த போக்குவரத்து துறை. 1965ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி திருவாங்கூர் மாநில டிரான்ஸ்போர்ட் துறை என்ற பெயர் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் என்று மாற்றப்பட்டது. கர்நாடகாவும் அதேபோன்ற பாரம்பரியம் கொண்டதுதான். ஆனால் 1973-ஆம் ஆண்டுதான் மைசூர் அரசு சாலைப் போக்குவரத்து துறை என்பது கர்நாடக போக்குவரத்து கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
டிரேட் மார்க் கேட்ட கர்நாடகா
2014ஆம் ஆண்டு கேஎஸ்ஆர்டிசி என்ற பெயருக்கு கர்நாடகா டிரேட்மார்க் கோரியபோது கேரளா போக்குவரத்து துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன் பிறகு வழக்கை துரிதப்படுத்தியது கேரளா. அந்த பெயர் தங்களுக்குத்தான் சொந்தம் என்று வாதிட்டது. அதில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. எனவே கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தனது பெயரை எப்படி மாற்றிக் கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.