பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பயங்கர தீவிபத்து.. முதுமலைக்கும் பரவுவதால் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ளது பந்திப்பூர் சரணாலயம். இது 1974-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தமிழகத்தில் முதுமலையையும் கேரளத்தில் வயநாடையும் எல்லையாக கொண்டுள்ளது.
இங்கு பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகிறது. எனினும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் பந்திப்பூர் காட்டில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
காட்டில் 200 ஏக்கருக்கு தீ பரவியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மேல்கம்மனஹள்ளி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மைசூரு- ஊட்டியை இணைக்கும் சாலை மூடபட்டுள்ளது.
ஹிமாவத் கோபாலசுவாமி மலை பகுதியில் உள்ள கோபாலசுவாமி கோயிலுக்கு பேருந்துகள் இயக்கத்தையும் வனத்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த தீயானது மேல்கம்மனஹள்ளி கேட்டின் அருகே உள்ள குந்தூரு ஏரி அருகே வெள்ளிக்கிழமை பரவியது தெரியவந்தது. சரணாலயத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும், வன உயிரின ஆர்வலர்களும் சென்றுள்ளனர்
இந்த காட்டுத் தீ அப்படியே அருகில் உள்ள தமிழகத்தின் முதுமலை வனப்பகுதிக்குள்ளும் பரவியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.