ஷ்ரத்தாவை போல்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பியூட்டிஷியன் கொடூர கொலை.. காதலனால் ஷாக்கில் பெங்களூர்
பெங்களூர்: டெல்லியில் ஷ்ரத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் அதேபோல் பெங்களூரில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் பியூட்டிஷியனின் தலையை சுவற்றில் பயங்கரமாக மோத செய்து காதலன் கொலை செய்த சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.
சமீபகாலமாக நடக்கும் குற்ற சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. குறிப்பாக டெல்லியில் சமீபத்தில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தா வால்கர் என்பவரை அப்தாப் கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக அப்தாப்பை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் பலரும் மீளாமல் உள்ள நிலையில் தான் அதுபோன்ற இன்னொரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
சல்லி சல்லியா நொறுங்கிய 'தாமரை’ கணக்கு! எடப்பாடியுடன் சேர முடியாது! ஃபர்னிச்சரை போட்டுடைத்த டிடிவி!
பியூட்டிஷியனுடன் பழக்கம்
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் வசித்து வருபவர் சந்தோஷ் தாமி. வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வந்தார். நேபாளத்தை சேர்ந்தவர் கிருஷ்ண குமாரி. இவர் பெங்களூரில் வசித்து கொண்டு பியூட்டிஷியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் சந்தோஷ் தாமிக்கும், கிருஷ்ண குமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
லிவ் இன் ரிலேஷன்ஷிப்
இந்த பழக்கம் நாளைடையில் இருவரையும் மிகவும் நெருக்கமாக்கியது. இதையடுத்து சந்தோஷ் தாமி மற்றும் கிருஷ்ண குமாரி ஆகியோர் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ தொடங்கினர். இவர்கள் 2 பேரும் பெங்களூர் ஹெரமாவு பகுதியில் உள்ள வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக வாழ்க்கை நடத்தி வந்தனர். மேலும் இருவரும் அடிக்கடி பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி வந்தனர்.
சுவற்றில் தலையை மோதச்செய்து கொலை
இந்நிலையில் தான் இன்று திடீரென்று அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சந்தோஷ் தாமி, கிருஷ்ணகுமாரியை தாக்கியதாக தெரிகிறது. மேலும் அவரது தலையை சுவற்றில் தொடர்ந்து மோத செய்தார். இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் கிருஷ்ண குமாரி பரிதாபமாக இறந்தார்.
டிசிபி கூறுவது என்ன?
இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் தாமியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபற்றி பெங்களூர் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர்(டிசிபி) பீமாசங்கர் குலேட் கூறுகையில், ‛‛கைதான சந்தோஷ் தாமியும், கொலையான கிருஷ்ண குமாரியும் கடந்த சில ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை நடந்துள்ளது. கிருஷ்ண குமாரியின் தலையை சுவற்றில் மோத செய்து கொலை நடந்துள்ளது. வாக்குவாதத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.