"பலாத்கார சம்பவம்.." மேகதாது பாதயாத்திரையை எதிர்த்த கர்நாடக உள்துறை அமைச்சரை விளாசிய காங். சிவகுமார்
பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் நடத்தி வரும் பாதயாத்திரைக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக அமைச்சர் அரக ஞானேந்திரா மீது காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சாய்னாவுக்கு ஆபாச ட்வீட் போட்ட சித்தார்த்.. வசமாக சிக்கி கொண்டது இப்படித்தான்.. பாய்ந்தது வழக்கு
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்பதில் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு உறுதியாக உள்ளது. ஆனால் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
சிவக்குமார் பாதயாத்திரை
இந்த நிலையில் மேகதாது அணையை விரைவாக கட்ட வலியுறுத்தி கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தலைமையில் 11 நாள் பாதயாத்திரை நேற்று தொடங்கியது. இந்த பாதயாத்திரையை முன்னாள் முதல்வர் சித்தராமையா, மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
பாதயாத்திரைக்கு எதிர்ப்பு
கர்நாடகாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனா பரவல் பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வீதியில் நின்று காங்கிரஸ் தலைவர்களுடன் மல்லுக்கட்ட விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் என்னைவிட மூத்தவர்.. முடிந்தால் தடுத்து பாருங்கள் என சவால்விடுவது நல்லது அல்ல... சிவக்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும் சிவக்குமார் உள்ளிட்டோர் மீது கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறியதாகவும் வழக்கு போடப்பட்டுள்ளது.
சிவக்குமார் விமர்சனம்
உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் இந்த கருத்தை சிவக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். கனகபுராவில் இன்று பொதுக்கூட்டத்தில் பேசிய சிவக்குமார், மைசூரு பெண் கூட்டு பலாத்கார விவகாரத்தில் அரக ஞானேந்திரா மன்னிப்பு கேட்ட விவகாரத்தையும் சுட்டிக்காட்டினார். 2021-ல் மைசூருவில் இளம்பெண் ஒருவர் கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அரக ஞானேந்திர, இரவு 7 மணிக்கு மேல் அந்த பெண் ஏன் அங்கு போக வேண்டும்? நினைத்த நேரத்தில் கண்டன இடத்துக்குப் போனால் நாங்கள் என்ன செய்வது? என பொறுப்பில்லாமல் பேசியிருந்தார். இதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால் அரக ஞானேந்திரா தமது கருத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
கொரோனா சோதனைக்கு மறுப்பு
இதனிடையே பாதயாத்திரையின் போது கொரோனா பரிசோதனைக்கு சிவக்குமார் மறுத்ததும் இப்போது சர்ச்சையாகி உள்ளது. மேலும் நாட்டில் கொரோனா என்பது எதுவும் இல்லை.. பாஜகவினர்தான் அப்படி எல்லாம் பரப்பிவிடூகின்றனர் எனவும் சிவக்குமார் கூறியிருந்தார். இதற்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.