வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்.. பல் இளித்த சாலைகள்.. பாஜக அரசை பங்கமாய் கலாய்த்த ப சிதம்பரம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. மற்ற மாவட்டங்களை போலவே மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது.
இதற்கு முன்னர் இவ்வாறு இல்லாத நிலையில் தற்போது தலைநகரம் வெள்ளத்தில் தத்தளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், பாஜக அம்மாநிலத்தில் எந்தெந்த திட்டங்களை செய்து வருகிறது என்று பட்டியலிட்டுள்ளார்.
வடிகால்
தென்னிந்தியாவில் சில மாநிலங்கள்தான் இயல்பிலேயே வெள்ளநீர் வடிகால்களை கொண்டுள்ளன. அதில் கேரளாவும், கர்நாடகாவும் முதன்மையானது. குறிப்பாக இந்த இரு மாநில தலைநகரங்களில் வெள்ள நீர் தேங்கியதாகவும், இதனால் கடுமைாய பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் இதுவரை பெரிய செய்திகள் எதுவும் வந்தது கிடையாது. ஆனால் திடீரென பெய்த கனமழை காரணமாக பெங்களூரூ மாநகரின் வீதிகளில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. படகுகளை கொண்டு மக்களை மீட்கும் அளவு வெள்ள நீர் தேங்கி நின்றது.
வெள்ளம்
பருவமழை காலம் என்பதால் வழக்கமாக தொடர் மழை பெய்து வந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று முழுவதும் பெரும் அளவில் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கத்தொடங்கியது. மழை நிற்காததாலும், வெள்ளநீர் வடியாததாலும் மேலும் பல இடங்களில் நீர் தேங்க தொடங்கியது. மட்டுமல்லாது சாலைகளில் நீர் வெள்ளம் பொல வழிந்தோடியது.
கருத்து தெரிவித்து டிவிட்
குறிப்பாக மாரத்தஹள்ளி-சர்ஜாபுரா அவுட்டர் ரிங் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகள் இந்த பகுதிகளை கடந்து செல்ல முடியாமல் அவதியுற்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மழைநீர் தேங்கிய மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம்.
கிண்டல்
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, முதலமைச்சர்களை மாற்றுவது, மக்களை பிளவுப்படுத்துதல், மத சர்ச்சைகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு கர்நாடகாவை ஆளும் பாஜக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால், வெள்ளத்தைப் பொறுத்தவரை, தெய்வீக சக்தியே வெள்ளத்தை ஏற்படுத்தியது, எனவே தெய்வீக சக்தியே தீர்வுகளைக் கண்டுபிடிக்கும்" பாஜக கூறுவதை போல கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.