இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்த ஹிஜாப் விஷயத்தை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது: உளவுத்துறை எச்சரிக்கை
பெங்களூர்: கர்நாடகத்தில் உருவான ஹிஜாப் சர்ச்சை விவகாரத்தை பாகிஸ்தான் பயன்படுத்த நினைக்கிறது. ஹிஜாப் ஆதரவு கையெழுத்து இயக்கத்தையும், உர்துஸ்தான் தனி நாடு கோரிக்கையையும் முன்னெடுக்க காலிஸ்தானின் ஒரு அமைப்பை பாகிஸ்தான் தூண்டுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உடுப்பியில் உள்ள பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. இதனால் முஸ்லிம், இந்துத்துவ மாணவர்கள் தனித்தனியே போராட்டம் நடத்தினர். அவர்கள் ஹிஜாப், காவி ஷால் அணிந்து கோஷங்கள் எழுப்பினர்.
கர்நாடகத்தின் பிற மாவட்டங்களுக்கும் போராட்டம் பரவியது. சிக்மகளூரு, மண்டியா, சிவமொக்கா, பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டி போராட்டம் நடந்தது. சில கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையானது.

ஐகோர்ட்டில் வழக்கு
ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஒருநீதிபதி அமர்வில் இருந்து 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது. மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம்சார்ந்த ஆடைகள் அணிந்து மாணவ-மாணவிகள் வரக்கூடாது என இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர். மேலும் வழக்கு விசாரணையை பிப்.,14க்கு ஒத்திவைத்தனர்.

பாகிஸ்தான் திட்டத்தில் காலிஸ்தான்
இந்நிலையில் ஹிஜாப் சர்ச்சையை பயன்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது என்று இந்தியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் சர்ச்சையான ஹிஜாப் விவகாரத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர் சர்வீஸ் இன்டெலிஜன்ஸ்(ஐஎஸ்ஐ) காலிஸ்தான் அமைப்பின் அங்கமான வக்கீல் குருபத்வானர் சிங் பன்னுவின் சிக்கீயர்களான நீதி கோரும் அமைப்பு (Sikhs for justice or SFJ) மூலம் ஹிஜாப் ஆதரவு கையெழுத்து இயக்கம் நடத்தவும், மத்திய இந்தியாவை இணைத்து உர்துஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கும் தூண்டி விட்டுள்ளது.

5 மாநிலங்களில்...
அதன்படி எஸ்ஜேஎப் அமைப்பு ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், பீகார், மேற்குவங்கம் மாநிலங்களில் உர்துஸ்தான் நாடு கோரிக்கையை முன்னெடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக எஸ்ஜேஎப் அமைப்பினர் வீடியோவில் பேசியுள்ளனர். மதங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேச்சு இருந்துள்ளது.
Recommended Video

செலவுகள் ஏற்பு
உர்துஸ்தான் நாட்டு முன்னெடுப்புக்கான அனைத்து செலவையும் எஸ்எப்ஜே கவுன்சில் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். இதனால் போலீஸ், சட்டத்துறையினர் கவனமாக இருக்க வேண்டும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஹிஜாப் கையெழுத்து இயக்கத்துக்கான ஆன்லைன் பதிவு தொடர்பான சில ஸ்கிரின் ஷாட், படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.












Click it and Unblock the Notifications