இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ கொலைகார படைகளை அமைத்தது பிஎஃப்ஐ:என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்!
பெங்களூர்: இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை 2047-ம் ஆண்டுக்குள் நிறுவும் நோக்கத்தில் ரகசிய கொலைக்கார படைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு அமைத்து வந்ததாக தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் 20 உறுப்பினர்கள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைக்க விரும்பும்.. அமைப்புகளை அனுமதிக்க முடியாது.. மத்திய அரசு வாதம்
பயங்கர கொலை
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தக்சின கன்னடா மாவட்டம் எப்போதும் மத ரீதியிலான மோதல் நடைபெறும் பதற்றமான பகுதியாக அறியப்படுகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு (32) என்பவர் பாஜக இளைஞர் அணி உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி பிரவீன் நெட்டாருவை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
என்ஐஏ வழக்கு
முதலில் இந்த வழக்கை கர்நாடகா போலீஸார் விசாரித்து வந்த நிலையில், பிறகு என்ஐவுக்கு இது மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த என்ஐஏ அதிகாரிகள் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள 6 பேரை என்ஐஏ தேடி வருகிறது. இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களிலேயே நாடு முழுவதும் பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.
கொலைகார படைகள்
இந்த சூழலில், இவ்வழக்கு தொடர்பாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 20 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தெரிவித்துள்ள முக்கிய அம்சங்களாவன: பிஎப்ஐ அமைப்பு தனது கொள்கைகளான தீவிரவாதத்தை பரப்புதல், சமூக அமைதியை சீர்குலைத்தல் மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக கொலைக்காரப் படைகள் (killer squads) என்ற பெயரில் ஒரு ரகசிய குழுவை அமைத்துள்ளது.
பயத்தை விதைப்பதற்காக..
தங்களுக்கு எதிரிகளாக கருதப்படுபவர்களை கொலை செய்வதற்காக இந்தப் படைகளைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு பிரத்யேக பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, பிரவீன் நெட்டாருவை கொலை செய்வதற்காக பெங்களூர், சுல்லியா, பெல்லாரே ஆகிய பகுதிகளில் பிஎப்ஐ அமைப்பின் நிர்வாகி முஸ்தபா பைச்சார் தலைமையில் பல கூட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. அதன் பிறகே பிரவீன் நெட்டாரு கொலை செய்யப்பட்டிருக்கிறார். மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை விதைப்பதற்காக இந்தக் கொலையை பிஎப்ஐ அமைப்பினர் அரங்கேற்றியுள்ளனர். இவ்வாறு என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.