கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சசிகலா! சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்த வழக்கில் முன்ஜாமீன்!
பெங்களூரு: பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ரூ.10 கோடியை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
சிறையில் சொகுசு வசதி... தொடரும் வழக்கு.. பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலா
பெங்களூ சிறையில் சசிகலா
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017-ம் ஆண்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். பெண்களுக்கான சிறையில் சசிகலாவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது.சசிகலா பெங்களூர் சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாக புகார் எழுந்தது.
சிறை டூ ஷாப்பிங்
மேலும் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே சென்று ஷாப்பிங் செய்து விட்டு இருவரும் சிறைக்கு திரும்பும் வீடியோ காட்சிகளும் வெளியாகின.இது தொடர்பாக டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா விசாரணை நடத்தி சிறையில் சசிகலா சொகுசாக வாழ்ந்ததை உறுதியும் செய்தார். நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கும் குற்றப்பத்திரிகையும்
சசிகலா லஞ்சம் கொடுத்தது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட விசாரணை குழுவும் உறுதி செய்தது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படையினர் சசிகலா மீது 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி சோமசேகர், டாக்டர் அனிதா, சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி ஆகிய 7 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
கிடைத்தது முன்ஜாமீன்
இவ்வழக்கை நீதிபதி லட்சுமி நாராயண் பட் விசாரித்தார். அப்போது இன்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி இருவரும் இன்று ஆஜராகினர். அப்போது தங்களை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க இருவரும் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இதனை ஏற்று இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.