6 நாட்களுக்கு பிறகு.. சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் திடீர் அதிகரிப்பு.. பெங்களூர் மருத்துவமனை தகவல்
பெங்களூர்: பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் சசிகலா. தண்டனைக் காலம் முடிந்து நேற்று முன்தினம் விடுதலையானார்.
அதேநேரம், சில தினங்களுக்கு முன் சசிகலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா சிகிச்சை
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார். தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தாலும், உடல்நிலை தேற வேண்டியிருப்பதால் அதே மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரத்த அழுத்தம் மாறுபாடு
இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு நாட்களுக்குப் பிறகு சசிகலாவிற்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை அளவு
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து மாறுபட்டு வருவதாகவும், அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சசிகலா ரத்தத்தில் சர்க்கரை அளவு, 278ஆக உள்ளளது.
சசிகலா விடுதலை
சிகிச்சைக்கு சசிகலா ஒத்துழைப்பு தருகிறார் என்று கூறியுள்ள மருத்துவமனை, அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. சசிகலாவின் விடுதலையை சிறைத்துறை நிர்வாகம் நேற்றுமுன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் தமிழகம் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.