காவிரி விஷயத்தில் தொடர் அநியாயம்! இனியும் சகித்து கொள்ள முடியாது! சித்தராமையா ஆவேசம்
பெங்களூர்: மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு கர்நாடக எதிர்க்கட்சி(காங்கிரஸ்) தலைவர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ‛‛1892 ஒப்பந்தம் முதல் தற்போது வரை கர்நாடகத்துக்கு மோசம் செய்கின்றனர். இனியும் அநியாயம் செய்ய நினைத்தால் அதை சகித்து கெள்வதில் சாத்தியமில்லை'' என ஆவேசமாக கூறினார்.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அம்மாநில அரசு புதிதாக அணை கட்ட முயற்சித்து வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் மேகதாது திட்டத்துக்கு ரூ.1000 கோடியை கர்நாடக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது.இதனால் தமிழகம், கர்நாடகம் இடையே கருத்து மோதல்கள் உள்ளன. கர்நாடக அரசுக்கு அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் கூட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தீர்மானம்
இதற்கிடையே மேகதாதுவில் விரைவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறி வருகிறார். இதையடுத்து தமிழக சட்டசபையில் கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான திமுகவுக்கு, எதிர்க்கட்சியான அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் தீர்மானம் எதிர்ப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சித்தராமையா கண்டனம்
இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் சட்டவிரோதமானது என விமர்சித்ததோடு கண்டனமும் தெரிவித்தார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சி(காங்கிரஸ்) தலைவர் சித்தராமையா இன்று பேசினார். அப்போது அவரும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி சித்தராமையா கூறியதாவது:

சட்டவிரோதமானது
தமிழக சட்டசபையில் ஆளும் கட்சி உள்பட பிற அரசியல் கட்சிகள் சார்பில் மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது. இதை நான் தீவிரமாக கண்டிக்கிறேன். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீர் தவிர கூடுதலாக வெளியேறும் நீரை பயன்படுத்தும் திட்டம் தான் மேகதாது. இதன்மூலம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதலாக நீர்
சுப்ரீம் கோர்ட் 16.02.2018 ல் இறுதி தீர்ப்பு கூறியது. இதில் ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுவில் இருந்து தமிழகத்துக்கு விட வேண்டும் என்று கூறியது. இதை 2 மாநிலங்களும் ஏற்றுக்கொண்டது. இதனால் தங்களுக்கான பங்கு நீரை பெற்று கொள்வது மட்டுமே தமிழகத்தின் உரிமை. சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு பின் இதுவரை 582 டிஎம்சி நீர் கூடுதலாக தமிழகம் சென்றுள்ளது. இது நமக்கான நீர். இதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

திட்ட அறிக்கை
பெங்களூரு நகரில் சுமார் 30 சதவீத மக்களுக்கு இன்னும் கூட காவிரி நீர் கிடைக்கவில்லை. இவர்கள் போர்வெல், டேங்கர் தண்ணீரை நம்பி உள்ளனர். சர்வதேச அளவில் பெயர் பெற்ற பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் இருப்பதை என்ன சொல்ல?
சுப்ரீம் கோர்ட் பெங்களூர் நகருக்கு 4.75 டிஎம்சி காவிரி நீர் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரித்து சமர்ப்பித்துள்ளோம். இதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

தொடர் அநியாயம்
காவிரி தொடர்பான விவாதம் என்பது 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே உள்ளது. அன்று முதல் நமக்கு அநியாயம் தான் நடக்கிறது. 1892 ஒப்பந்தம், 1924 ஒப்பந்தம் என பலமுறை நமக்கு நியாயம் கிடைக்கவில்லை. இனியும் அநியாயம் செய்ய நினைத்தால் அதை சகித்து கொள்வதில் சாத்தியமில்லை.

மத்திய அரசுக்கு அழுத்தம்
நாம் நமது நிலம், நீர், மொழி, எல்லை ஆகியவற்றில் அரசியல் செய்தது இல்லை. வரும்நாட்களிலும் இதை செய்வது இல்லை. நேற்று முதல்வர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் எங்களின் நிலைப்பாட்டை கூறினோம். நமக்கு அரசியலை விட மாநில மக்களின் நலன் முக்கியம். அதனால் தமிழகத்தின் தீர்மானத்தை கண்டித்து நாமும் கூட தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மோடியுடன் சந்திப்பு
மேலும் அனைத்து கட்சியினரும் ஒன்றாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைக்க வேண்டும். மத்திய அரசு மாநில நலனுக்காக போராட தயாரக உள்ளோம். காவிரி நீர் நமது உரிமை. இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை'' என ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications