கர்நாடகாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் சாகவில்லை.. ஹைகோர்ட் ரிப்போர்ட்டுக்கு அரசு மறுப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக யாரும் பலியாகவில்லை என்று கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். அதோடு ஆக்சிஜன் தொடர்பாக கர்நாடக ஹைகோர்ட் அமைத்த குழு வெளியிட்ட ஆய்வு அறிக்கை தவறானது என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள சமராஜநகர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த மே மாதம் வரிசையாக பலர் கொரோனா காரணமாக பலியானார்கள். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டது. சித்தராமையா ஆட்சிக்கு எதிராக தற்போது எழும் புகார்களில் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணமும் முக்கியமான ஒன்றாக வைக்கப்பட்டது.
இதையடுத்து சமராஜநகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக ஹைகோர்ட் குழு ஒன்றை அமைந்தது. முன்னாள் ஹைகோர்ட் நீதிபதிகள் ஏஎன் வேணுகோபால், கேஎன் கேசவநாராயணா அடங்கிய குழு அமைக்கப்பட்டு இது பற்றி விசாரிக்கப்பட்டது.
சென்னைக்கு வேலை தேடி போகத்தேவையில்லை.. தென் மாவட்டங்களிலேயே ஐடி பார்க்.. அமைச்சர் தகவல்
விசாரணை
சமராஜநகர் மாவட்ட மருத்துவமனையில் இந்த குழு விசாரணை முடித்த நிலையில் தற்போது ரிப்போர்ட் தாக்கல் செய்துள்ளது. அதன்படி சமராஜநகர் மருத்துவமனையில் 36 பேர் ஆக்சிஜன் இன்றி மரணம் அடைந்ததாக அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 4 முதல் 10 வரை பலியான 62 பேரில் 36 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணம் அடைந்ததாக ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
பரபரப்பு
இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கர்நாடகாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக யாரும் பலியாகவில்லை என்று கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இது ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட மரணம் இல்லை. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்.
அலட்சியம்
அங்கு போதிய ஆக்சிஜன் இருந்தது. இருந்தாலும் நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதால் இந்த மரணம் நேர்ந்தது. இதை ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணம் என்று கூற முடியாது. போதிய ஆக்சிஜன் எங்களிடம் இருந்தது . கர்நாடகாவில் எங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. நாங்கள் முறையாக ஆக்சிஜனை எல்லா மருத்துவமனைக்கும் வழங்கி வந்தோம்.
அறிக்கை
மாநிலத்தில் எங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக மரணம் ஏற்படவில்லை. இதில் நாங்கள் கவனமாக செயல்பட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் போது எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா மரணங்கள் ஏற்படவில்லை என்று நேற்றுதான் மத்திய அரசு ராஜ்ய சபாவில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது