ஒரு சாதிக்கும் மட்டும் அதிகாரம் சொந்தமல்ல.. இடஒதுக்கீடு நம் அரசியல் உரிமை! சித்தராமையா அதிரடி பேச்சு
பெங்களூரு: இந்திய சமூகத்தில் சாதிய அமைப்புமுறைக்கு காரணமானவர்கள், இப்போது இடஒதுக்கீடு முறையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள் என்று கர்நாடகா மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஓய்வுபெற்ற நீதியரசர் நாகமோகன் தாஸ் இடஒதுக்கீடு பற்றி எழுதிய மித் & ரியாலிட்டி புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலந்துகொண்டு பேசினார். அப்போது சமூகத்தில் நிலவி வரும் சாதிய அமைப்புமுறை குறித்தும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார்.

வாய்ப்பு மறுப்பு
அதில், கடந்த காலத்தில் கல்வி, அதிகாரம் ஆகியவற்றை பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும் என்பது இடஒதுக்கீடு போன்றது அல்லவா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, சூத்திரர்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் உழைத்து உற்பத்தி செய்த பொருட்களை அனுபவிக்கும் வாய்ப்பும் மறுக்கப்பட்டது. அநீதி அல்லவா. ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் நலனைப் பாதுகாக்க சமூகத்தில் சாதி அமைப்பு தொடர்ந்தது. இது சமூகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.

இடஒதுக்கீடு ஆதரவு
அந்த காலத்தில் நிலவியது எழுதப்படாத இடஒதுக்கீடு. இதை கொண்டு வந்தவர்கள் யார்? வளங்களை அனுபவித்தவர்கள் யார்? சமூகத்தில் சாதிய அமைப்புமுறையை கொண்டு வந்தவர்கள், இப்போது இடஒதுக்கீடு எவ்வளவு காலம் தொடரும் என்று விடை கேட்கிறார்கள். இன்னும் சிலர் ஏன் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். கல்வி, அதிகாரம் என அனைத்தும் எந்த ஒரு சாதியினருக்கும் சொந்தமானது அல்ல என்று தெரிவித்தார்.

யாரும் பேசுவதில்லை
மில்லர் கமிஷன் அறிக்கைக்குப் பிறகு மைசூர் சமஸ்தானத்தில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு முறையை யார் எதிர்த்தார்கள் என்று நான் கேட்டால் கோபப்படுவார்கள். மத்திய கிழக்கிலிருந்து ஆரியர்கள் இங்கு வந்து திராவிடர்களாகிய நம் மீது அட்டூழியங்களைச் செய்தார்கள் என்று சொன்னாலும் கோபம் வரும். தனியாக பேசினாலும் திட்டுகிறார்கள். அதனால் தான் நம்மில் பலரும் இதுகுறித்து பேசுவதில்லை. இது நாட்டிற்கும், சமூகத்திற்கும் சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீடு உரிமை
தொடர்ந்து, அண்ணல் அம்பேத்கர் இல்லையென்றால், அரசியல் சாசனம் எழுதியிருக்க முடியுமா? இடஒதுக்கீடு என்பது நமது அரசியல் சாசன உரிமை. 1955ல் போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதியாக இருந்தோம். இன்னும் அமைதியாக இருந்தால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது. சுயமரியாதை இருந்தால்தான் நாம் மரியாதையாக வாழ முடியும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications