கர்நாடக அரசு நிலை பரிதாபம்.. மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று மேலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கடுமையான சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறது.
கடந்த சில நாட்களில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 16-க்கு உயர்ந்துள்ளதால், ஆட்சி கலைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
ஹொசகோட்டை காங்கிரஸ் எம்எல்ஏ நாகராஜ் மற்றும், சிக்பள்ளாப்புரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சுதாகர் ஆகிய இருவரும், இன்று அடுத்தடுத்து, சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மஜத எம்எல்ஏக்கள் மூவர் ஏற்கனவே ராஜினாமா கொடுத்திருந்தனர். எனவே கூட்டணியிலிருந்து 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
மும்பை ஹோட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தி கூட்டி வர, அமைச்சர் டி.கே.சிவகுமார் சென்றிருந்தார். காலை முதல் ஓட்டலுக்குள் நுழைய முயன்று முடியாத நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். இப்படி ஒரு பக்கம் ஏற்கனவே போனவர்களை அழைத்துவர காங்கிரஸ் தலைவர்கள் முயன்றால், மற்றொரு பக்கம், பெங்களூரில் அடுத்தடுத்து இருவர் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் கோடியில் ஆபரேஷன் தாமரை.. மாஃபியா பாணியில் கடத்தல்! பாஜகவுக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு
இதன் மூலம் காங்கிரஸ்-மஜத கூட்டணி பலம் 99 எம்எல்ஏக்கள் என்ற அளவுக்கு சரிவடைந்துள்ளது. அதேநேரம் பாஜக பலம் 105. இரு சுயேச்சைகள் ஆதரவும் அவர்களுக்கு உள்ளது. எனவே காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால், அரசு பெரும்பான்மை இன்றி கலையும் சூழல் உருவாகும்.