ஆளுநர் அழைத்தால் கர்நாடகத்தில் உடனே ஆட்சியமைக்க நாங்க ரெடி.. ஆவலுடன் காத்திருக்கும் பாஜக
Recommended Video
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, மாநில ஆளுநர் அழைத்தால் ஆட்சியமைக்க தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார்.
கர்நடகத்தில் ஆட்சி செய்து வரும் கூட்டணி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 10-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர்.
தங்களது ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த கடிதங்களின் மீது வரும் செவ்வாய் கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்த கையோடு மும்பை பறந்தனர் எம்எல்ஏக்கள்.
தற்போது கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கெல்லாம் பாஜகவின் ஆபரேஷன் தாமரையே காரணம் என காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக அரசியல் நிலவரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜக-வை சேர்ந்த மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, கர்நாடகாவில் தங்கள் கட்சி ஆட்சியமைக்க தயாராக உள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய சதானந்த கவுடா தற்போது கர்நாடகாவை ஆட்சி செய்து வரும் கூட்டணி அரசு மக்கள் நலன் மற்றும் தொகுதிகளின் நலன்களை கருத்தில் கொள்ளவில்லை என்பதற்காகவே எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்
தற்போது பதவியை துறந்துள்ளவர்கள் குறிப்பிட்ட இரு கட்சிகளில் இருந்து வெளியேறி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைத்துள்ளார்கள். ஏனெனில் மக்களது நலன்களை யோசிக்காத அரசில் அங்கம் வகித்து, எம்எல்ஏ பதவியில் தொடர்வது தொகுதி மற்றும் மாநிலத்தின் பெரிய நலன்களுக்கு எதிரானது என அவர்கள் உணர்ந்துள்ளளனர்.
எனவே தான் அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்ற சதானந்த கவுடாவிடம், கர்நாடகத்தில் ஆட்சி கவிழும்பட்சத்தில் அடுத்த புதிய அரசு பாஜக தலைமையில் அமையுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசியலமைப்பு ஆணைப்படி மாநில ஆளுநருக்கே இங்கு உச்ச அதிகாரம் உள்ளது.
அவர் அழைத்தால் கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக தயாராகவே உள்ளது என்றார். எங்கள் கட்சி தலைமையில் புதிய அரசு அமைந்தால் எடியூரப்பாவே முதல்வராக இருப்பார்.
தற்போது கர்நாடகாவில் நிகழ்ந்து வரும் உச்சகட்ட அரசியல் குழப்பங்களுக்கு பாஜக எந்த வகையிலும் காரணமில்லை என்ற சதானந்த கவுடா இடைத்தேர்தல் வந்து மக்களின் வரிப்பணம் வீணாவதை, எந்த கட்சியினரும் விரும்பவில்லை. எனவே ஆளுநர் பாஜகவிற்கு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.