இந்தியாவில் ஹிஜாப் அணிந்த பிரதமர் பதவியேற்பார்! கர்நாடகாவில் பேசிய ஓவைசி.. பாஜக பதில் என்ன தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய அசாருதீன் ஒவைசி ஹிஜாப் விவகாரம் தொடர்பாகக் கூறிய கருத்துக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்ச்சை கிளப்பி இருந்தது. அங்கு பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் கூட வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், அங்கும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. அதில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
சிமி மாஜி மாவட்ட தலைவர்தான் கோவை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி அசாருதீன்!
கர்நாடகா
கர்நாடகாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் அங்கு முகாமிடத் தொடங்கி உள்ளனர். அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி உள்ள நிலையில், மற்ற கட்சிகளும் கணிசமான இடங்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாருதீன் ஒவைசி இப்போது அங்கு முகாமிட்டுள்ளார்.
ஒவைசி
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு வருகிறார். இதனிடையே ஹிஜாப் தொடர்பாக ஒவைசி கூறியதற்கு பாஜக பதில் அளித்து உள்ளது. கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஒவைசி, "நாட்டில் இப்போது மதச்சார்பின்மையை இருக்கிறது. அதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. அதற்கான நடவடிக்கையைத் தான் இப்போது அவர்கள் எடுக்கத் தொடங்கி உள்ளனர்.
ஹிஜாப்
நாட்டில் இப்போது அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் நிலையில், அதை காலி செய்யவே பாஜக முயல்கிறது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் உடைக்குத் தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இரு வேறு தீர்ப்பை வழங்கி உள்ளது. முஸ்லீம் பெண்கள் படிப்பது அவசியம் என்றும், ஹிஜாப் அணிந்து படிக்கச் செல்ல விரும்பினால், அது ஒரு பிரச்சனையல்ல என்று நீதிபதி கூறினார். இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.
எல்லாமே பிரச்சினை தான்
ஹலால் இறைச்சி, முஸ்லீம்களின் தொப்பிகள், தொடி என அனைத்திலும் தங்களுக்கு ஆபத்து இருப்பதாக பாஜக நினைக்கிறது. அவ்வளவு ஏன் உணவுகளில் கூட பிரச்சினை என்கிறார்கள். பாஜக கட்சியே முஸ்லிம் அடையாளத்திற்கு எதிராக உள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி என்று பிரதமர் கூறுவது பொய்யாகவே உள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் முஸ்லீம் அடையாளத்தை அழிப்பதே பாஜகவின் உண்மையான திட்டம்" என்று அவர் கூறினார்.
ஹிஜாப் அணிந்த பிரதமர்
மேலும், வரும் காலத்தில் இந்திய நாட்டில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் பிரதமராவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். பிரிட்டன் நாட்டின் பிரதமராக முதல்முறையாக ரிஷி சுனக் இப்போது பிரதமராகி உள்ளார். 200 ஆண்டுக்கால பிரிட்டன் வரலாற்றில் இந்து ஒருவர் பிரதமர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும். இதைப் பலரும் வரவேற்று வரும் நிலையில், ஒவைசி இப்படிக் கூறி இருந்தார்.
பாஜக பதில்
இதனிடையே இதற்கு பாஜகவின் ஷெஹ்சாத் பூனவல்லா பதிலளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று ஒவைசி நம்புகிறார்! சரி, அரசியலமைப்புச் சட்டம் யாரையும் தடுக்கவில்லை, ஆனால் ஹிஜாப் அணிந்த பெண் எப்போது மஜ்லிஸ் கட்சியின் தலைவராவார் என்று சொல்லுங்கள். அதிலிருந்து தொடங்கலாமா?" என்று பதிலடி கொடுத்துள்ளார்.