இனி டிராபிக் பிரச்னை இல்லை! வந்தாச்சு சூப்பர் தீர்வு.. கூகுள் உடன் கைகோர்க்கும் பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: டெக் தலைநகராக அறியப்படும் பெங்களூரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை, பெங்களூர் என அனைத்துமே எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல்!
சென்னையில் பீக் ஹவரில் சர்தார் படேல் சாலை, நந்தனம் பகுதிகளில் எந்தளவுக்குப் போக்குவரத்து இருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. ஆண்டுக்குக் கணக்கிட்டால் இதனால் பல மணி நேரம் ஒவ்வொரு நபருக்கும் வீணாகிறது.

பெங்களூர்
அதிலும் டெக் தலைநகராகக் கருதப்படும் பெங்களூர் டிராபிக் குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் வலம் வரும் மீம்களே பெங்களூர் டிராபிக்கின் சாட்சியாகும். பெங்களூர் தொடர்ந்து அதிகரிக்கும் போக்குவரத்தை நெரிசலைக் குறைக்கப் பெங்களூர் போக்குவரத்து போலீசாரும் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், அது பெரியளவில் பலன் தருவதாக இல்லை.

ஸ்தமித்துவிடும்
நிலைமை இப்படியே தொடர்ந்தால் பெங்களூர் சாலைகளே ஒரு கட்டத்தில் ஸ்தமித்துவிடும் அபாயமும் உள்ளது. இது பெங்களூர் டிராபிக் போலீசாருக்கு பெரும் தலைவலியாகவே மாறி உள்ளது. இதனிடையே டிராபிக் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாகப் பெங்களூர் போலீசார் தொழில்நுட்பத்தின் பக்கம் திரும்பி உள்ளனர். இதற்காகப் பெங்களூர் போலீசார் முக்கிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் உடன் கை கோர்த்து உள்ளனர்.

கூகுள் உடன் கைகோர்ப்பு
கூகுள் நிறுவனத்துடன் காவல் துறை நேரடியாகக் கைகோர்ப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று பெங்களூரு போக்குவரத்து இணை ஆணையர் பி.ஆர்.ரவிகாந்தே கவுடா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நகரத்தில் நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்தை எளிதாக நிர்வகிப்பதற்கும் கூகுள் உடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

சிக்னல்
நகரில் தினசரி பயணிக்கும் லட்ச கணக்கான மக்களின் பயண நேரத்தை வெகுவாக இது குறைக்கும். இதற்காகக் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சோதனை முயற்சியாக ட்ராஃபிக் விளக்குகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். இது சிக்னல்களில் பயணிகளின் காத்திருப்பு நேரத்தை ஏற்கனவே குறைத்துள்ளது. வரும் காலத்தில் இன்னும் சில முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம்.

ஒவ்வொரு நாளும் ஒரு திட்டம்
கூகுளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் மக்கள் எந்த சாலைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த தகவல்களை அளிக்கும். இதன் அடிப்படையில் டிராபிக் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டத்தை ஒவ்வொரு நாளும் கூகுள் போலீசாருக்கு பரிந்துரைக்கும். ஏற்கனவே சாலையில் காத்திருப்பு நேரம் 20% வரை குறைக்கப்பட்டு உள்ளது இது நேரத்தை மட்டும் மிச்சப்படுத்தாது. எரிபொருளையும் மிச்சப்படுத்தும், தேவையற்ற போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும்.

மிக விரைவில்
மிக விரைவிலேயே நகரில் இருக்கும் அனைத்து சிக்னல்களிலும் இந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த உள்ளம். இது நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பெரியளவு உதவும் என எதிர்பார்க்கிறோம். இது குறைந்தது ஒரு கோடி வாகனங்களில் போக்குவரத்தில் எதிரொலிக்கும். மேலும், விபத்து உள்ளிட்ட சாலை மூடல்கள் குறித்த தகவல்களையும் கூகுள் மூலம் பயணிகளுக்குத் தெரிவிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்,

பிரதமர் மோடி
மேலும், பெங்களூரில் ஒவ்வொரு சாலையிலும் எந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்ற வேக வரம்புகளை மேப் வழியாகக் கூறவும் போலீசார் திட்டமிட்டு உள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மாதம், பிரதமர் நரேந்திர மோடி பெங்களூர் வந்து இருந்த போது நகரின் போக்குவரத்து சிக்கல் குறித்துப் பேசினார். பல ஆண்டுகளாகத் தொடரும் பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு 40 மாதங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் உறுதிமொழி அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications