சிக்கிய ‘காந்த்’.. முக்கோண வியூகம்.. மோப்பம் பிடித்த பாஜக.. எடப்பாடி உறவினர் மாட்டியதற்கு பின்னணி!?
பெங்களூர் : கர்நாடகா ஊழல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனின் சகலையான சந்திரகாந்த் மீது லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதற்குப் பின்னணியில், ஒரு முக்கோண வியூகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, காண்டிராக்டர் சந்திரகாந்த் ஆகியோர் காங்கிரஸுக்கு உதவும் வகையில் செயல்பட்டு 'முக்கோண வியூகம்' அமைத்ததாலேயே அவர்களை பாஜக மேலிடம் குறிவைத்தது என்கிறார்கள்.
கர்நாடகாவில் பாஜக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை விமர்சிக்கும் வகையில் 'பே சிஎம்'என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த போஸ்டர்கள் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் இருந்து ஒட்டப்பட்டவை என்று கூறப்பட்டாலும் இதில் மேலும் இரு தரப்பின் கைகளும் இருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
கர்நாடகாவில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு 40% கமிஷன் கேட்பதால் கொந்தளித்த ஒப்பந்ததாரர்கள் பசவராஜ் பொம்மை அரசு மீது கோபமாக இருந்து வந்துள்ளனர். அதில் முக்கியமான கையாகச் செயல்பட்டவரே இந்த எடப்பாடி பழனிசாமியின் உறவினரான சந்திரகாந்த் தான் என்கிறார்கள்.
ஓபிஎஸ் கோட்டைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி.. விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல்.. ஆர்பி உதயகுமார்!
40% கமிஷன்
கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பணிகள் அனைத்திலும் ஊழல் நடைபெறுவதாக அம்மாநில ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக அனைத்து அரசு ஓப்பந்தங்களுக்கும் கர்நாடக அரசு 40% கமிஷன் பெறுவதாக மாநில சட்டமன்றத்திலேயே குற்றம்சாட்டி, அதற்கு விசாரணை வேண்டும் என்று பேசினார் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா. இதனால், முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு பெரும் சிக்கல் எழுந்தது.
பே சி.எம்
பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் பாஜக அரசால் 40 சதவீதம் கமிஷன் பெறப்படுவதை விமர்சிக்கும் வகையிலேயே க்யூ ஆர் கோடு உடன் ஒரு போஸ்டரை வடிவமைத்து சமீபத்தில் சுவர்களில் ஒட்டப்பட்டன. அதில் பே டிஎம் என இருக்கும் இடத்தில் 'பே சிஎம்' என அச்சிடப்பட்டிருந்தது. 'இங்கு 40% ஏற்றுக்கொள்ளப்படும்' என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. க்யூ ஆர் கோட் இடம்பெறும் இடத்தில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உருவம் இடம்பெற்றிருந்தது. இந்த க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தால் புகாரளிக்கும் இணையதளத்துக்குச் செல்லும்.
பொம்மைக்கு குடைச்சல் - 3 கைகள்
இந்த 40% கமிஷன் போஸ்டர் கர்நாடக பாஜக அரசுக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை பூகம்பமாகக் கிளப்பியதற்குப் பின்னணியில் முக்கியமான 3 கைகள் இணைந்துள்ளனவாம். எதிர்க்கட்சியான காங்கிரஸ், கமிஷனால் பாதிக்கப்படும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் இணைந்தே இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இருக்கிறார்கள் என்கின்றனர்.
பொறுமலில் எடியூரப்பா
கர்நாடகா முன்னாள் முதல்வரான எடியூரப்பாவின் மகனான விஜயேந்திராவுக்கு அமைச்சர் பதவியை எதிர்பார்த்து வந்தார் எடியூரப்பா. தனது முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மைக்கு மாற்றிய நிலையில், மகனுக்கும் அமைச்சர் பதவி கொடுக்காததால் பொறுமிவந்த எடியூரப்பா குடும்பத்தினர் பசவராஜ் பொம்மைக்கு எதிரான இந்த திட்டத்தில் கை கொடுத்திருக்கிறார்கள் என்கிறார்கள். இதை பாஜக தலைமை அறிந்ததால் தான் முறைகேடு வழக்குல் லோக் ஆயுக்தா விசாரணை அவர் மீது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள்.
பின்னணியில் சந்திரகாந்த்
40 சதவீத கமிஷன் கேட்பதால், கடுப்பில் இருந்து வந்த அம்மாநில காண்டிராக்டர்களும் இந்த விவகாரத்தில் காங்கிரஸுக்கு தோள் கொடுக்கின்றனர். அவர்களில் காண்டிராக்டர் சந்திரகாந்த் ராமலிங்கம் முக்கியமானவர். இவர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகனான மிதுனின் சகலை. இவர் தான், பாஜக அரசுக்கு எதிராக காண்டிராக்டர்களை ஒருங்கிணைக்கிறார் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன. எடியூரப்பாவின் பேரன் சசிதரும், சந்திரகாந்த் ராமலிங்கமும் பேசியதாக ஒரு ஆடியோவும் லீக்கானது குறிப்பிடத்தக்கது.
கவனித்த மேலிடம் - கூண்டோடு
இதையெல்லாம் கவனித்த டெல்லி பாஜக மேலிடம், பாஜக அரசுக்கு எதிராக சதியில் ஈடுபட்டு காங்கிரஸுக்கு உதவும் எடியூரப்பா, சந்திரகாந்த் ராமலிங்கம் என 9 பேரை கூண்டாகச் சிக்க வைத்துள்ளது என்கிறார்கள். பெங்களூரு வளர்ச்சி ஆணையம்( பி.டி.ஏ.) சார்பில் குடியிருப்பு கட்டிடம் கட்டும் திட்டத்திற்கு அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா அனுமதி வழங்கி இருந்தார். இதுதொடர்பான ஒப்பந்த பணிகள் ராமலிங்கம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருந்தது.
லோக் ஆலோக் ஆயுக்தாவுக்கு உத்தரவு
இந்த கட்டுமான பணிகளை வழங்க, ராமலிங்கம் நிறுவனத்திடம் இருந்து முதல்வராக இருந்த எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவு துறை மந்திரி சோமசேகர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்த அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தான் கடந்த 14ஆம் தேதி பி.டி.ஏ குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்து விசாரணை நடத்தவும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட், லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது.
சிக்கிய சந்திரகாந்த்
கர்நாடக ஐகோர்ட் உத்தரவின்பேரில் பி.டி.ஏ குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, சஞ்சய், சசிதர், சந்திரகாந்த் உள்ளிட்டோர் மீது பெங்களூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ.12 கோடி லஞ்சம் கொடுத்தாக கர்நாடக லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்திருப்பதால் சந்திரகாந்த் ராமலிங்கத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவர்களை மொத்தமாக இப்போது தூக்கியதற்கு பின்னணி காரணமே அந்த 40% கமிஷன் புகார் பிரச்சனை தானாம்.
பதறிப்போன பழனிசாமி
தொழில் ரீதியாக எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், சந்திரகாந்த்தோடு தொடர்பில் இருந்து வருகிறாராம். இதனால், சந்திரகாந்த் மீதான வழக்கால் மிதுனுக்கு ஏதும் சிக்கல் நேருமோ என பயந்த எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றபோது உள்துறை அமித்ஷாவிடம் இதுகுறித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக அரசுக்கு எதிராகச் செயல்பட்டதால் எடியூரப்பா, சந்திரகாந்த் உள்ளிட்டோரை சிக்க வைத்துள்ள பாஜக, எடப்பாடி பழனிசாமி வரை கையை நீட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.