'பால் கறக்க மறுக்கிறது'.. 'என்னானு கேளுங்க'.. எருமை மாடுடன் வந்து போலீசில் புகார் கொடுத்த விவசாயி!
இந்தூர்: குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும், குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை சம்பவம், பாலியல் புகார்கள் என பல்வேறு புகார்கள் காவல் நிலையத்துக்கு வருகின்றன.
தமிழ்நாட்டில் நேற்று 812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஒரே நாளில் 8 பேர் மரணம்
இந்த நிலையில் விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் எருமை மாடு மீது போலீசில் புகார் கொடுத்த வினோத சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டம் நயாகாவ்ன் கிராமத்தை சேர்ந்தவர் பாபுலால் ஜாதவ் (45).
'பால் கறக்க அனுமதி மறுக்கிறது'
விவசாயியான இவர் எருமை மாடு ஒன்றை வளர்த்து வந்தார். மாட்டிடம் இருந்து பாலை கறந்து விற்று வருமானம் ஈட்டி வந்தார். கடந்த சில நாட்களாக எருமை மாட்டிடம் இருந்து சரியாக பால் கறக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி விவசாயி கிராமத்தில் உள்ளரவர்களிடம் விசாரித்துள்ளார். அதில் ஒரு சிலர், '' உனது எருமை மாடு மாந்திரீகத்தில் பாதிக்கப்பட்டு பேய் பிடித்ததுபோல் உள்ளது. இதனால்தான் பால் கறக்க அனுமதி மறுக்கிறது'' என்று கண்டபடி வாய்க்கு வந்ததை கொளுத்தி போட்டார்கள்.
எழுத்துபூர்வமாக புகார்
விவசாயி பாபுலால் ஜாதவும் இதனை உண்மை என நம்பி விட்டார். தொடர்ந்து என்னசெய்வதென்று தெரியாமல் புலம்பிய விவசாயி கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றார். ''கடந்த சில நாட்களாக எனது எருமை என்னை பால் கறக்க அனுமதிப்பதில்லை. அது மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. என்னெவன்று பார்க்க வேண்டும்'' என்று எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார். இதனை படித்து பார்த்த போலீசாருக்கு சிறிது நேரம் தலையே சுற்றி விட்டது.
எருமையை கூட்டி வந்தார்
புகார் கொடுத்த விவசாயியை ஏற, இறங்க பார்த்த போலீசார் ''இப்படி ஒருத்தன்கிட்டபோய் மாட்டிகிட்டோமே'' என்று மனதில் நினைத்தபடி ''சரி நடவடிக்கை எடுக்கிறோம்'' என்று கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி வீட்டுக்கு சென்ற விவசாயி பாபுலால் ஜாதவ் 4 மணி நேரம் கழித்து எருமை மாட்டை அழைத்து கொண்டு மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்தார்.
மாந்திரகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது
இவரை பார்த்தவுடன் சில காவலர்கள் தலைதெறிக்க ஓட., எருமை மாட்டுடன் விவசாயி வந்திருக்கும் விஷயம் உயர் அதிகாரிகள் காதுகளை வந்தடைந்தது. அவர்கள் விவசாயியை அழைத்து விசாரித்தபோது, '' என்னை பால் கறக்க அனுமதிக்க விடாமல் இருக்கும் மாடு இதுதான். மாந்திரகத்தால் பாதிக்கப்ட்டுள்ளது'' என்று விவசாயி மறுபடியும் கூற உயர் அதிகாரிகளுக்கு வேர்த்து கொட்டியது.
நோய் பாத்திருக்கலாம்
இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகள் அவரிடம் '' உங்கள் எருமை மாடு மாந்திரீகம், கீந்தரீகம் என எதிலும் பாதிக்கப்படவில்லை. ஏதாவது நோய் எருமையை பாத்திருக்கலாம். இதன் காரணமாக பால் கறக்க முடியாமல் போயிருக்கலாம். கால்நடை மருத்துவரை போய் பாருங்கள். எருமை சரியாகி விடும்'' என்று புரியும்படி தெளிவாக கூறி விவசாயியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகுதான் அங்கிருந்த காவலர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.