3 வங்கிகள் இணைப்பு ஏன் - அருண் ஜெட்லி விளக்கம்
அரசுக்குச் சொந்தமான தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியை உருவாக்குவதற்காகவே பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி இணைக்கப்படுகிறது என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
இந்திய வங்கிகளுக்கு நீண்ட காலமாகவே வாராக் கடன் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. அதோடு வங்கி மோசடிகளும் வங்கித் துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளன.
பொதுத் துறை வங்கிகளின் செயல்பாட்டுக்காக அரசு தரப்பிலிருந்து மூலதன உதவிகள் வழங்கப்பட்டு வந்தாலும் வாராக் கடன்களை மீட்க முடியாமல் வங்கிகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் அரசுக்குச் சொந்தமான மூன்று வங்கிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ப்ராம்ப்ட் கர்ரெக்டிவ் ஆக்சன் மூலமாக மூன்று வங்கிகள் இணைக்கப்படுகிறன. மத்திய அரசின் ஆலோசனைப்படி நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வங்கிகள் மற்றும் கொஞ்சம் தொய்வான நிலையில் இயங்கி வரும் ஒரு வங்கி என தேர்வு செய்யப்பட்டு இந்த வங்கி இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இந்த வங்கி இணைப்பு குறித்து யாரும் வருத்தமோ அச்சமோ படத்தேவையில்லை இவை வங்கிகளின் செயல்பாட்டினை மேலும் அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பினை வெளியிடும் போது அருண் ஜெட்லி குறிப்பிட்டு பேசினார்.
மூன்று பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு குறித்து அருண் ஜெட்லி, பியூஷ் கோயல், மற்றும் நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்ட பின்னர் அவ்வறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. விஜயா மற்றும் தேனா வங்கிகளின் பிராந்திய கிளைகளில் செயல்களை பரோடா பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல் பரோடா வங்கி உலக அளவில் பெற்று வரும் ஆதாயங்களை தேனா மற்றும் விஜயா வங்கிகள் பெற்றுக் கொள்ளும் என பரோடா வங்கியின் தலைமை செயல் அதிகாரி பி.எஸ். ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இவ்வங்கிகள் இணைந்த பிறகு உருவாகும் புதிய வங்கியானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகிய வங்கிகளைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாகத் திகழும் என்று நிதிச் சேவைகள் துறை செயலாளரான ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இவற்றின் இணைந்த தொழில் மதிப்பு ரூ.14.82 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வாராக் கடன்களைப் பொறுத்தவரையில் விஜயா வங்கிக்கு ஜூன் 30 வரையில் ரூ.7,579 கோடியும், தேனா வங்கிக்கு ரூ.15,866 கோடியும், பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ரூ.55,874 கோடியும் வாராக் கடன் உள்ளது. மூன்று வங்கிகளும் இணைந்த பிறகு இவற்றின் வங்கிச் சேவை மேம்பட்டு வாராக் கடன்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பாஜக ஆட்சியில் ஐந்து வங்கிகள் எஸ்.பி.ஐ வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஐடிபிஐ வங்கியின் அதிக பங்குகளை எல்.ஐ.சி வாங்க உள்ளது. ஐடிபிஐ வங்கி மற்றும் தேனா வங்கிகள் போல் இந்தியாவில் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் வங்கி, பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா, யூனைட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேசன் வங்கி மற்றும் அலஹாபாத் போன்ற பலமற்ற வங்கிகளை மற்ற வங்கிகளுடன் இணைப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு.
வங்கிகள் இணைப்புக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு வெளிப்படுத்தி வந்தது. ஆனால், அப்படிச் செய்வது வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட நோக்கத்தைக் கெடுத்துவிடும். விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது” என்று தெரிவித்துள்ளவர், இந்த நடவடிக்கை என்பது விஜய் மல்லையாவை தப்பிக்கவிட்ட பிரச்சினையிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது இணைக்கப்படும் மூன்று வங்கிகளில் இரண்டு வங்கிகள் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருபவை. தேனா வங்கியின் வாராக் கடன் அளவு மிக அதிகமாக இருப்பதால் அது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது. அதை விட சற்றே லாபத்தில் இயங்கி வரும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைப்பதால் அந்த வங்கியும் பின்னடைவுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே அதன் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கிவிட்டது.