வரி விலக்கு பெற போலி பில் கொடுத்தால் தண்டனை- வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி
2018 -19ஆம் நிதியாண்டில் இருந்து வருமான வரி செலுத்துபவர்கள் தப்பிக்காமால் இருப்பதற்காக கிடுக்கிப்பிடி போட வருமான வரித்துறை தயாராகி வருகிறது.
மும்பை: வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க செலவு செய்ததாக போலியான டம்மி பில்லை சமர்பித்தால் அவர்களுக்கு கிடுக்கிப் பிடி போட வருமான வரித் துறை தயாராகி வருகிறது.
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் தனிநபர் வருமான வரி செலுத்துபவர்கள், வருமான வரி விலக்கு பெறுவதற்காக அடிப்படை விலக்கு தொகையான 2.50 லட்சம் ரூபாய் போக, வருமான வரி விதி 80சி பிரிவின்படி ரூ.1.50 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு பெறமுடியும் என்பது வரி செலுத்துவோர் அனைவரும் அறிந்ததே.
இந்த வரி விலக்கு பெறுவதற்கு போதுமான ஆதாரங்களையும் ஆவணங்களையும் நாம் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயம் ஆகும். இதோ இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்கு.
செலவு செய்த ஆதாரங்கள்
இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே அனைத்து தொழில் நிறுவனங்களிலும் உள்ள மனிதவள மேம்பாட்டு துறை (HR Dept) வருமான வரி வரம்பிற்குள் வரும் அனைத்து ஊழியர்களையும் தேடிப்பிடித்து அவர்களின் கழுத்தை பிடிக்காத குறையாக வருமான வரி விலக்குக்காக செலவு செய்த பில்களையும் (Reimbursement) முதலீடு (Investments) செய்ததற்கான ஆதாரங்களையும் வாடகை செலுத்தியதற்கான (Rent Receipts) ஆதாரங்களையும் சேகரித்து வருவதுண்டு.
வரி பிடித்தம்
பெரும்பாலான ஊழியர்கள் எதற்கு வம்பு, நம் வரியை நாம் சரியாக செலுத்திவிடுவோம் என்று முடிவெடுத்து, தங்களின் மாத சம்பளத்தில் இருந்து ஆண்டு வருவாயை கணக்கிட்டு அதற்கேற்ப வரியை (TDS) பிடித்தம் செய்ய ஒப்புக்கொண்டு விடுவதுண்டு. சில ஊழியர்கள் நிதியாண்டின் இறுதியில் வரி விலக்கு பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்வதாக உறுதி அளித்துவிட்டு அப்போதைக்கு தப்பித்து விடுவதுண்டு.
போலி பில் தாக்கல்
நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாத இறுதி வாக்கில் கேட்டால், ஏதாவது டம்மி பில்களை தாக்கல் செய்துவிட்டு, அப்பாடா! ஒருவழியாக தப்பித்து விட்டோம் என்று நிம்மதியாக இருந்துவிடுவதுண்டு. அதாவது நடப்பு நிதியாண்டு வரையிலும் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால், இனிமேல் இப்படி டம்மியான பில் ஆதாரங்களைக் தாக்கல் செய்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது.
வரி விலக்கு
உதாரணமாக, மருத்துவச் செலவுகளுக்காக நடப்பு நிதியாண்டு வரையிலும் 15000 ரூபாய் வரையிலும் தனிநபர் தங்களின் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறமுடியும். அதுபோலவே, விடுமுறைகால போக்குவரத்து சலுகை (Leave travel allowance) சலுகைக்கும் நாம் வருமான வரி செலுத்துவதில் இருந்து விதிகளுக்கு உட்பட்டு நாம் விலக்கு பெறமுடியும். நடப்பு நிதியாண்டு வரையிலும் நாம் இந்த செலவுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் என்ற நிலை இருந்தது.
அசல் பில் தேவை
வரும் நிதியாண்டில் இருந்து வருமான வரி செலுத்துபவர்கள் தப்பிக்காமால் இருப்பதற்காக கிடுக்கிப்பிடி போட வருமான வரித்துறை தயாராகி வருகிறது. மருத்துச் செலவு, விடுமுறைகால போக்குவரத்து சலுகை போன்றவற்றிற்கு தக்க ஆதார ஆவணங்களை நாம் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். இல்லை என்றால் வருமான வரித் துறை நம் மீது எடுத்து வரி ஏய்ப்பு செய்ததாக கைது செய்ய முடியும்.
உறுதி செய்வது அவசியம்
இது குறித்து கருத்து தெரிவித்த பிரபல மனிதவள மேம்பாட்டு நிறுவனமான எச் அன்ட் ஆர் பிளாக் இந்தியா நிறுனத்தின் வரி ஆராய்ச்சி பிரிவின் தலைமை அதிகாரி சேத்தன் சந்தக் என்பர், அனைத்து ஊழியர்களும் தங்களின் வரி விலக்கு பெறுவதற்கான அனைத்து ஆதாரங்களையும், ஆவணங்களையும் தங்களின் மனிதவள பிரிவிற்கு தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும். கூடவே அனைத்து பில்களும் ஆவணங்களும் அசல் ஆவணங்கள்தானா? என்பதையும் ஆராய்ந்து அதன் நகல் தன்மையை உறுதி செய்யவேண்டியது கட்டாயம் ஆகும் என்று தெரிவித்தார்.