தங்கம் இறக்குமதி 3 மடங்காக உயர்வு - இந்தோனேசியாவில் இருந்து அதிகம் இறக்குமதி
நடப்பு நிதியாண்டில் (2017-18) ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 15.24 பில்லியன் டாலர்களாகும்.
சீனாவைத் தொடர்ந்து தங்கம் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தங்கத்தின் மீது இந்தியர்கள் அதிகம் சேமிப்பது வழக்கம்.
இல்லத்தரசிகள் நகைகளாக வாங்கி சேமிப்பார்கள். நகைகளுக்கான தேவையைக் கருத்தில்கொண்டு தங்கம் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டைத் தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் தங்கம் இறக்குமதி ஏறுமுகமாகவே உள்ளது.
தங்கம் இறக்குமதி
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 1,524 கோடி டாலர் மதிப்புள்ள தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் தங்க இறக்குமதியின் மதிப்பு 508 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட்டில் அதிகம்
நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 188 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் கடந்த ஆண்டு 111 கோடி டாலர் மதிப்புள்ள தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1,164 கோடி டாலர்
கடந்த மாதம் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளதால் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1,164 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறையின் மதிப்பு 770 கோடி டாலராக இருந்தது.
வர்த்தகப் பற்றாக்குறை
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 5.08 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதியில் கடந்த மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 1.88 பில்லியன் டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டில் 7.7 பில்லியன் டாலராக இருந்தது.
உலோகம் இறக்குமதி
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலோக இறக்குமதியின் மதிப்பு 1.88 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.11 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான உலோகம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
பண்டிகை காலம்
தீபாவளி, தை பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்கள் நெருங்கிக்கொண்டிருப்பதால் தங்க இறக்குமதியின் அளவு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது தங்கத்துக்கு 10 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா தங்கம்
தென்கொரியாவில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவது தற்போது மத்திய அரசுக்கு நெருக்கடியாக உள்ளது. இந்தியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதால் தங்க இறக்குமதிக்கு சில வரிகள் கிடையாது. அதனால் இந்திய வர்த்தகர்கள் தென் கொரியாவிலிருந்து அதிக தங்கத்தை இறக்குமதி செய்து வருகின்றனர்.
இந்தோனேசியா தங்கம்
இந்தோனேசியாவில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் அதிகபட்சமாக 600 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
2020ல் தங்கம் இறக்குமதி
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் 650 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நடப்பாண்டு 750 டன்னாக உயரும் என்றும் 2020 ஆம் ஆண்டு தங்கத்தின் இறக்குமதி 950 டன் ஆக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.