தங்கம் விலை அடுத்து என்னவாகும்? "எனக்கு நம்பிக்கை இல்லை.." ஆனந்த் சீனிவாசன் என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே நிற்காமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வமாக உள்ள சூழலில், அதன் விலை தொடர்ந்து அதிகரிப்பது பலருக்கும் கவலையையே தருகிறது. வரும் காலத்திலும் தங்கம் விலை இப்படி தான் இருக்குமா.. இல்லை விலை குறையக் கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை கொரோனா சமயத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வந்தது. இடையில் சில காலம் அதன் விலை ஏற்றம் சற்று குறைந்தது. மத்திய அரசும் கடந்த பட்ஜெட்டில் இறக்குமதி வரியைக் குறைத்திருந்தது.

குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்குப் பிறகு தங்கம் விலை கணிசமாகவே குறைந்தது. இதனால் மக்கள் ஆர்வமாகத் தங்கத்தை வாங்கி வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.
தங்கம் விலை:
கடந்த பல நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரே ஒரு நாள் மட்டுமே சென்னையில் 22 கேரட் தங்கம் விலை குறைந்துள்ளது. அதுவும் ரூ.10 மட்டுமே. மறுபுறம் இதே காலகட்டத்தில் தங்கம் விலை ரூ.225 அதிகரித்துள்ளது. இப்படி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் தங்கத்தை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை ஏன் இந்தளவுக்கு அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை விளக்கியுள்ளார். மேலும், வரும் காலங்களில் தங்கம் விலை சரியக் கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறது என்பதற்கும் முக்கிய பதிலை அளித்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்:
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "24 கேரட் தங்கம் விலை ரூ.8135ஆக இருக்கிறது. 22 கேரட் தங்கம் ரூ.7455ஆக இருக்கிறது. இன்னும் 5 ரூபாய் உயர்ந்தால் தங்கம் விலை புதிய உச்சம் தொடும். இதுபோக வரி வேற இருக்கிறது. 24 கேரட் தங்கம் ரூ.8135ஆக உள்ள சூழலில், அத்துடன் நாம் வரியைச் சேர்த்தால் கிட்டதட்ட ரூ.8500க்கு வந்துவிடும். ரூபாய் மதிப்பு கொஞ்சம் வேகமாகச் சரிந்தால் இது ரூ.8350க்கு போய்விடும்.
தங்கம் விலை உயரும்:
ஜிஎஸ்டி சேர்த்து பார்க்கும் போது 24 கேரட் தங்கம் விலை சீக்கிரமே ரூ.8500ஐ கடந்துவிடும். தங்கம் விலை உயர்வாலும் இது நடக்கலாம், ரூபாய் மதிப்பு சரிவதாலும் கூட இது நடக்கலாம். எப்படி இருந்தாலும் இன்னும் ரூ.200 வந்தால் போதும். மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கலாம் என்ற தகவல் வந்த உடனேயே மும்பையில் உள்ள ஆசியாவின் பெரிய தங்கச் சந்தையான ஜாவேரி பஜாரில் தேவை 60% வரை அதிகரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்" என்றார்.
அதேபோல அவர் மற்றொரு வீடியோவில், "அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரியும் நிலையில், அதைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி முயன்று வருகிறது. ஆனால், இந்த டிரெண்ட் தொடரவே செய்யும். வரும் மார்ச் மாதத்திற்குள் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.87க்கு கூட போய்விடும். ரிசர்வ் வங்கி ஆளுநரே இதை அனுமதிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எனக்கு நம்பிக்கை இல்லை:
24 கேரட் தங்கம் விலை ரூ.8000ஐ தாண்டியே இருக்கும் என நினைக்கிறேன். பெரியளவில் விலை குறையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், ரூபாய் மதிப்பு சரிவதால் அது மேட்ச் ஆகிவிடும். இதனால் இந்தியாவில் தங்கம் விலை பெரியளவில் குறையாது. அதேநேரம் அடுத்த 2 ஆண்டுகளில் தங்கம் விலை பெரியளவில் உயரும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications