அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - 67.45 லட்சம் பேர் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல்
அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,00,710 கோடியாகும். செப்டம்பர் மாத இறுதி வரை 67.45 லட்சம் ஜிஎஸ்டிஆர் படிவம் 3 தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
டெல்லி: அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல் விவரத்தை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த மாதம் ரூ.1,00,710 கோடி வரி வசூலாகியுள்ளது. செப்டம்பர் மாத இறுதி வரை 67.45 லட்சம் ஜிஎஸ்டிஆர் படிவம் 3 தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாகவும், ஜூலை மாதத்தில் ரூ.96,483 கோடியாகவும் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.93,960 கோடியாக கடும் சரிவை சந்தித்தது. செப்டம்பர் மாதத்தில் ரூ.94,000 கோடியாக உயர்ந்தது. அக்டோபரில் ரூ.1,00,710 கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பதிவில், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதில் மத்திய அரசுக்கான வரி (சிஜிஎஸ்டி) ரூ.16,464 கோடியாகும். மாநில அரசுக்கான எஸ்ஜிஎஸ்டி பங்கு ரூ. 22,826 கோடியாகும். ஐஜிஎஸ்டி ரூ.53,419 கோடியாகும். சுங்க வரி வசூல் ரூ.8,000 கோடியாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி, சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது. இதன்மூலம் நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறை பின்பற்றப்படும் என கூறப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இதை சரிவர திட்டமிடாததால், பல அத்தியாவாசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, ஜிஎஸ்டியில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனையடுத்து பல பொருட்களின் விலை குறைந்தது.
ஜிஎஸ்டி அமலானதில் இருந்து வரி வசூல் ரூ.90,000 கோடி அளவிலேயே இருந்தது. 2017-18ஆம் நிதியாண்டில் சராசரியாக 89,895 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்ச அளவாக ரூ.1,03,459 கோடியாக இருந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் வரி வசூலில் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.93,960 கோடியாக சரிவடைந்தது. இது 2018-19 ஆம் நிதியாண்டில் குறைவான வரி வசூல் என்று நிதியமைச்சகம் அறிவித்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.94,000 கோடியாக வசூலானது. அக்டோபர் மாதத்தில் அதிரடியாக ரூ.1,00,710 கோடி வசூலை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாத வரி வசூல் அதற்கு முந்தைய மாதத்தை விட 6.64 சதவீதம் அதிகமாகி உள்ளது. மொத்த வரிவசூலில் சில மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளன. குறிப்பாக கேரளா 44 சதவிகித வரிதாரர்களை கொண்டுள்ளது. ஜார்க்கண்ட் 20 சதவிகிதம், ராஜஸ்தான் 14 சதவிகிதம், உத்தரகாண்ட் 13 சதவிகிதம், மகாராஷ்டிரா11 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.