பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.63 காசுகள் உயர்வு: நள்ளிரவு முதல் அமல்
சென்னை: பெட்ரோல் விலையை மீண்டும் திடீரென உயர்த்தியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள். இந்த முறை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.63 உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 1.63 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. வாட் வரி இதில் சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால், மாநிலத்திற்கும் இந்த விலை உயர்வு மாறுபடும். அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் ரூ 2.07 உயர்ந்துள்ளது.
இதனால் சென்னையில் இன்று நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.56க்கு விற்பனை செய்யப்படும். டெல்லியில் லிட்டருக்கு ரூ.1.96 உயர்ந்து ரூ.76.06க்கு விற்பனையாகும். மும்பையில் ரூ.81.57க்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல், இனி ரூ.83.63க்கு விற்பனை செய்யப்படும்.
இது ஏழாவது முறை
ஜூன் மாதத்திற்குப் பிறகு 7-வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு இதுவரை லிட்டருக்கு ரூ.10.80 உயர்த்தப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் விலை குறைவு, ரூபாய் மதிப்பிலும் குறிப்படத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதால் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. இந்த விலை குறைப்பு அறிவிப்பு வரும் 15 அல்லது 16-ம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இம்மாத துவக்கத்தில் ஏற்பட்ட ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, தற்போது எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை இரு தினங்களுக்கு முன்பே சொல்லாமல் கொள்ளாமல் உயர்த்திவிட்டன.
தற்போதைய சந்தை நிலவரம், அடுத்தமுறை பெட்ரோல் விலை மாற்றியமைக்கப்படும்போது கணக்கில் கொள்ளப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டீசல் விலை
அடுத்த இரண்டொரு தினங்களில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ 3 வரை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.