நெல்லையில் வெங்காயத்தை முந்தியது கனகாம்பர விலை
நெல்லை: திருநெல்வேலியில் வெங்காயவிலையைவிட கனகாம்பர விலை பல மடங்கு உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
கார்த்திகை மாத பிறப்பு காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வெங்காய விலையை விட பல மடங்கு விலை உயர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கனகம்பர பூவை வாங்காமல் வேறு வகை பூவை வாங்கி சென்றனர்.
தீபாவளி, கார்த்திகை, பொங்கல், போன்ற விசேஷ தினங்களில் பூக்களின் தேவை மிக அதிகமாக இருக்கும். அதனால் சீசன் காலங்களில் பூக்களின் விலை தானாகவே உயரும். ஆனால் இந்தாண்டு தொடக்கத்தில் பூக்களின் திடீரென வீழ்ச்சியடைந்தது.
மல்லிகை வீழ்ச்சி
மல்லிகை விலை கிலோ ரூ.200லிருந்து ரூ.150க்கு இறக்கி விற்கப்பட்டது. இதற்கு காரணம் நல்ல விளச்சல் காரமணமாக அதிக அளவில் மார்க்கெட்டுக்கு மல்லிகை பூக்கள் வந்ததே ஆகும்.
காரணம் என்ன?
மல்லிகை விலை வீழ்ச்சி குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கார்த்திகை பண்டிகை மாதத்தின் 2வது வாரம் தான் வழக்கமாக வரும். ஆனால் இந்தாண்டு கார்த்திகை மாதம் பிறந்தவுடன் திருகார்த்திகை கொண்டாடப்பட்டதால் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதற்கு போதிய அளவு மக்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளாததால் பூக்கள் வாங்குவதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.
மழையால் பூக்கள் விளைச்சல்
மேலும் கடந்த சில நாட்களாக புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பூக்கள் நல்ல விளைச்சல் கண்டன. இதனால் கனகம்பரம் தவிர்த்து மல்லிகை உள்பட மற்ற பூக்கள் விலை சரிந்தது.
கனகாம்பரம் விலை ரூ1000
இதற்கு மாறாக கனகம்பரம் பூ கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது. கனகம்பரத்தை பொறுத்தவரை நுகர்வு குறைவு என்பதால் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்று கூறப்படுகிறது. குறைந்த அளவு வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் கூட விலையை கேட்டு மற்ற பூக்களை வாங்கி சென்றனர்.
மழையால் வினை
கனகம்பரத்தை பொறுத்தவரை தண்ணீர் அதிகம் படக்கூடாது. எனவே அவற்றின் விலை எகிறியுள்ளது.
சந்தை நிலவரம்
நெல்லை சந்தையில் பிச்சி கிலோ ரூ.250, சம்பங்கி ரூ.100, ரோஸ், 150, கேந்தி ரூ.80, வாடாமல்லி ரூ.50, அரளி ரூ.150 என விற்கப்பட்டது.