மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி வரும் வங்கி... புதிய வேலைவாய்ப்பு உருவாகுது!
முதியவர்களுக்கு சேவை அளிப்பதற்காக புதிய ஆட்களை தேர்வு செய்ய வங்கிகள் விளம்பரம் அளித்துள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
டெல்லி: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்வதற்காக ஆட்களை தேர்வு செய்யும் பணியை வங்கிகள் தொடங்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் வங்கிகளில் உருவாகியுள்ளன.
ஸ்மார்ட்போன்களில் மட்டுமின்றி, சாதாரண போன்களிலும் பணம் அனுப்புதல் வசதியை வங்கிகள் அளிக்கின்றன. ஆனால் நகரங்களில் உள்ளவர்கள், தொழில்நுட்பங்களை பற்றி அறிந்தவர்கள் என குறைவான அளவிலான மக்களே இந்த வசதிகளை பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலானவர்கள் அடிப்படை சேவைக்கு கூட வங்கிக்குதான் நேரில் செல்கின்றனர். இதன் காரணமாக 70வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன்களுக்கு வீட்டுக்கே சென்று சேவை வழங்க வேண்டும் என கடந்த மாதம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

மாற்றுத்திறனாளிகள்
வங்கி கிளைகளுக்கு வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகள், பார்வையற்றவர்கள் போன்றவர்களுக்கு வங்கி அதிகாரிகள் சரிவர சேவை வழங்குவதில்லை என தெரியவந்துள்ளது. எனவே, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மருத்துவ துறையால் அங்கீகரிக்கப்பட்டு சான்று பெற்ற மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் ஆகியோருக்கு வங்கிகள் அவர்களின் வீட்டுக்கே சென்று சேவை வழங்க வேண்டும்.

வீடு தேடி வரும் வங்கி சேவை
பணம் பெறுவது, பணம் அளிப்பது, டிமான்ட் டிராப்ட் அளிப்பது, உயிர்ச்சான்று பெற வேண்டியிருந்தால் வீட்டுக்கே சென்று வாங்கி வருவது, வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருந்தால் அவற்றை நேரில் சென்று வாங்கி வருவது போன்ற சேவைகளை வங்கிகள் அளிக்க வேண்டும்.

ஆட்கள் தேர்வு
மேற்கண்ட சேவைகளை வங்கிகள் இந்த ஆண்டு டிசம்பர் 31க்குள் அமல்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்த சேவைக்காக புதிதாக ஆட்களை தேர்வு செய்ய வங்கிகள் திட்டமிட்டுள்ளன. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பந்தன் வங்கி அடுத்த நிதியாண்டில் சுமார் 5000 பேரை வேலைக்கு எடுக்க இந்த வங்கி முடிவு செய்துள்ளது.

வீடு தேடி வரும் வங்கி சேவை
பணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் டிஜிட்டல் வங்கிச்சேவை பிரபலமாகி வருகிறது. மத்திய அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்பால் இந்த பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதியவர்களுக்கு வீட்டுக்கே சென்று வங்கிச் சேவை அளிக்கும் உத்தரவு இத்துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கியுள்ளது. எனவே, அடுத்த நிதியாண்டில் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.












Click it and Unblock the Notifications