சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சர்வதேச முதலீட்டாளார்கள் மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வர்த்தகம் மற்றும் சந்தை வர்த்தக கொள்கையால், பொருளாதார மேம்பாட்டில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

கடந்த 1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மாநிலத்தில் போர்டு, ஹூண்டாய் போன்ற சர்வதேச மோட்டார் நிறுவனங்கள் மட்டுமின்றி டிவிஎஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட உள்ளூர் நிறுவனங்களும் தமிழகத்தில் உற்பத்தி நிலையங்களை தொடங்கியதன் காரணமாக, சர்வதேச அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் பிடித்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கையால் மின்னணு உற்பத்தியில் பெரும் புரட்சி ஏற்பட்டது, இதனால் மோட்டோரோலா, ஃபாக்ஸ்கான், டெல், சாம்சங் ன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்ததோடு, தற்போது மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நாட்டிலேயே பெரும் பங்கு வகிக்கிறது, ஜவுளி, தோல் மற்றும் மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

தொழில்மயமாக்கப்பட்ட 3 மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் தமிழகம், சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023 என்ற மாபெரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், 217 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தமிழ்நாடு தொழிற்கொள்கை 2014-ன் மூலம் மிகப்பெரிய அளவில் தொழில்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் மாறியிருப்பதோடு, தானியங்கி, உதிரிபாகங்கள் தயாரிப்பு, உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

தொழில்துறையில் பின்தங்கிய தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அபரிமிதமான தொழிலாளர்கள், தொழில் தொடங்கிட ஏற்ற சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக முன்னேற்றம் கண்டுவரும் தமிழகத்தில், சர்வதேச மூதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அடுத்த ஆண்டு மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

மின்னணு, உதிரி பொருட்கள், ஜவுளி, வேளாண் மற்றும் உணவுப் பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் மருந்து பொருட்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், ரசாயனம், பெட்ரோ கெமிக்கல், பொறியியல் மற்றும் சாலைகள், சிறுதுறைமுகங்கள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், மரபுசாரா எரிசக்தி முகமைகள் ஆகியவற்றில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்த மாநாடு வகை செய்யும் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

முன்னதாக இதுதொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெறும். இத்தகைய மாநாடுகள் மூலம் அமைதி, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடத்தை பெறும். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+