பாஜக தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு.. 100 விவசாயிகள் மீது தேச துரோக வழக்கு.. ஹரியானா போலீஸ் அதிரடி
சண்டிகர்: துணைச் சபாநாயகர் ரன்பீர் கங்வாவின் காரை விவசாயிகள் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு புதிய விவசாய சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி விவசாயிகள் அப்போது முதலே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கார் சேதம்
அதன்படி கடந்த ஜூலை 11ஆம் தேதி ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். அப்போது அம்மாநில துணை சபாநாயகர் ரன்பீர் கங்வாவின் காரை விவசாயிகள் சேதப்படுத்தியாகக் கூறப்படுகிறது. அன்றைய தினமே விவசாயிகள் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

தேசத்துரோக வழக்கு
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்கும், கொலை செய்ய முயன்றதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில முக்கிய விவசாயச் சங்கத் தலைவர்கள் மீது இந்த எஃஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள விவசாய அமைப்புகள், பொய்யான குற்றச்சாட்டில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது பற்றி நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பொய் வழக்கு
இது தொடர்பாக விவசாய அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூத்த விவசாய தலைவர்கள் உட்பட 100 விவசாயிகள் மீது அரசு தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், இது முற்றிலும் பொய்யான வழக்கு. ஹரியானா துணைச் சபாநாயகருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினோம் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளன. ஹரியானா பாஜக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம்
முன்னதாக தேசத் துரோக சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தான் சில கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது. இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேசத் துரோக சட்டம் என்பது விடுதலை போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் கையில் எடுத்த ஒரு ஆயுதம். நாடு சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் அந்த ஒரு சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டுமா என்று தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பியிருந்தார்.

வழக்கு
உச்ச நீதிமன்றத்திடம் இருந்து இப்படி கடுமையான கருத்துகள் வந்து, சில மணி நேரம் கூட ஆகாத நிலையில், ஹரியானாவில் விவசாயிகளுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் அனைத்து போராட்டங்களையும் அரசு இப்படி தான் ஒடுக்குவதாக விவசாயிகள் விமர்சித்துள்ளனர்.

முதல்வர் வார்னிங்
முன்னதாக கடந்த மாதம் ஹரியான முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் கூறுகையில், "நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். ஆனால் அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். முதலமைச்சர், துணை முதல்வர் என யாரையும் பணி செய்ய விடுவதில்லை. மக்களைச் சந்திக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எங்களைப் பணி செய்யவிடாமல் வரம்பு மீறுவது நல்லதல்ல" என எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications