ராகுலின் டீ ஷர்ட்டை விடுங்க.. அதுக்குள்ளே இன்னொன்னு இருக்கு பாருங்க.. அடுத்த பஞ்சாயத்தை கூட்டிய பாஜக
சண்டிகர்: பாஜகவை எதிர்த்து நாடு முழுவதும் 'பாரத் ஜடோ யாத்திரையை' ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கையில், அவர் அணிந்திருந்த டீ-சர்ட் பெரும் விவாதப்பொருளானது. கடும் குளிரிலும் வெறும் டீ-சர்ட்டுடன் பயணிக்கிறார் என்று பரபரப்பா பேசப்பட்டது. இந்நிலையில் இந்த டீ-சர்ட் குறித்து முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை பாஜகவினர் கிளப்பி விட்டுள்ளனர்.. இதுதான் காங்கிரஸ் தரப்புக்கு எரிச்சலை கூட்டி வருகிறது.
காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் கடும் சரிவை எதிர்கொண்டது. இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, இதனையடுத்து பல மாநிலங்களிலும் ஆட்சியை இழந்தது, கட்சியிலிருந்து தலைவர்கள் அடுத்தடுத்து வெளியேறியது என பல நெருக்கடிகளை கட்சி சந்தித்தது. போதாத குறைக்கு கட்சிக்கு புதிய தலைமை வேண்டும் என்று சோனியா காந்திக்கு அக்கட்சியின் முன்னணி தலைவர்களே கடிதம் எழுதினர். இதனையடுத்து காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது என்று பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் விமர்சிக்க தொடங்கின.
இப்படி இருக்கையில்தான், எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் செல்வாக்கை பலப்படுத்தி பாஜகவின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கவும், பாஜகவின் அரசியல் கொள்கைகளுக்கு எதிராகவும் ராகுல் காந்தி பாரத் ஜடோ யாத்திரையை தொடங்கினார். கடந்த செப்டம்பர் மாதம் இந்த யாத்திரையானது தமிழ்நாட்டின் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி.. இதுதான் ஸ்டாலின் செய்ற சாதனை.. எஸ்பி வேலுமணி அட்டாக்
யாத்திரை
இந்த யாத்திரையின் நோக்கம் 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,500 கி.மீ தூரம் மக்களை சந்தித்து கட்சிக்கான ஆதரவை திரட்டுவதுதான். இவையனைத்தையும் 150 நாட்களில் முடிக்க வேண்டும். திட்டமிட்டபடியே யாத்திரையானது கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என 8 மாநிலங்களை கடந்து ராஜஸ்தானில் தனது 100வது நாளை எட்டியது. இதனையடுத்து டெல்லியில் யாத்திரை நுழைந்தது. இந்த சமயத்தில்தான் டெல்லியில் குளிர்காலம் தனது வீரியத்தை காட்ட தொடங்கியிருந்தது. நடுங்கும் குளிரிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
லட்சம் ரூபாய் டீ-சர்ட்
அன்றாட போக்குவரத்தும் கடும் சிரமத்திற்கு உள்ளானது. பனி கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைய தொடங்கிய நிலையில், ராகுல் காந்தியும் யாத்திரையை தீவிரப்படுத்தினார். குளிர் 10 டிகிரிக்கும் கீழ் பதிவாக தொடங்கியது. இவருடன் பயணித்த அனைவரும் ஸ்வெட்டர் ஜர்க்கின் என உடலுக்கு வெப்பமான ஆடைகளை அணிந்திருக்க ராகுல் காந்தி மட்டும் வெறும் வெள்ளி நிற அரைக்கை டீ-சர்ட்டுடன் நடக்க தொடங்கினார். யார்த்திரை கன்னியாகுமரியில் தொடங்கிய போது இதேபோன்ற டீ-சர்ட்டைதான் அவர் அணிந்திருந்தார். இந்த டீ-சர்ட் லட்சம் ரூபாய் மதிப்பிலானது என பாஜகவினர் குற்றம் சாட்டினர்.
கடும் குளிரில் வெறும் டீ-சர்ட்
ஆனால் டெல்லியில் இதே டீ-சர்ட்டுடன் இவர் நின்றுகொண்டிருக்கையில் இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பரவ தொடங்கின. ராகுல் காந்தி ஒரு யோகி என்றும், அவர் தவ நிலையில் தனது இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் எனவே அவருக்கு இந்த குளிர் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்றும் காங்கிரஸ் கட்சியினர் பேச தொடங்கினர். யாத்திரை தொடங்கி இரண்டாவது முறையாக இவரது டீ-சர்ட் மீண்டும் பேசுபொருளானது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விவசாயிகள், தொழிலாளர்கள் இது கூட இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
தெர்மல் பனியன்
ஆனால் இன்று மீண்டும் இந்த டீ-சர்ட் பேசுபொருளாகியுள்ளது. அதாவது ராகுல் காந்தி நிமிர்ந்து இருப்பதை போல ஒரு புகைப்படம் டிவிட்டரில் வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தில் அவர் அணிந்திருக்கும் டீ-சர்ட்டினுள் உள் பனியன் இருப்பது போன்று தெரிகிறது. இதனை சுட்டிக்காட்டிய பாஜகவினர் அவர் உடலுக்கு வெப்பம் தரும் தெர்மல் டீ-சர்ட்டை அணிந்திருக்கிறார் என்று கூறியுள்ளனர். எனவேதான் கடும் குளிரிலும் இவரால் ஹாயாக பயணிக்க முடிகிறது. மற்றபடி இவர் ஒன்றும் மகாமுனியெல்லாம் கிடையாது. யோகியும் கிடையாது என்று விமர்சித்துள்ளனர். தற்போது இது தொடர்பான படங்கள் பரவலாக பரவி வருகிறது.