கொடூரம்.. பொதுவெளியில் ஆம்ஆத்மி பெண் எம்எல்ஏவின் கன்னத்தில் ‛பளார்’ விட்ட கணவர்.. பரபரத்த பஞ்சாப்
சண்டிகர்: பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் பெண் எம்எல்ஏவான பல்ஜிந்தர் கவுரை அவரது கணவர் பொதுவெளியில் பளார் என் தாக்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி தற்போது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2020ம் ஆண்டை ஒப்பிடும்போது 2021ல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட விபரங்களின் படி இந்தியாவில் 15 சதவீதம் வரை பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு எதிராக குடும்ப பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இந்நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
எடப்பாடி வைத்த 8 கன்னி வெடிகள்! பொதுக்குழு வழக்கில் மெகா ட்விஸ்ட்.. வழக்கில் இபிஎஸ் வென்றது எப்படி?
பரவும் வீடியோ
இந்த வீடியோவில் பெண் ஒருவர் தன்னை சுற்றி நிற்பவரிடம் வாக்குவாதம் செய்கிறார். பின்னர் ஒருவர் அவரை கொடூரமாக கன்னத்தில் தாக்குகிறார் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் அந்த சம்பவம் எங்கு நடந்தது? வீடியோவில் இருப்பது யார்? என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆம்ஆத்மி எம்எல்ஏ
அதாவது வீடியோவில் தாக்குதலுக்கு ஆளாகும் நபர் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலம் தால்வாண்டி சாபோ தொகுதியின் எம்எல்ஏ பல்ஜிந்தர் கவுர் என்பது தெரியவந்தது. மேலும் அவரை அவரது கணவர் சுக்ராஜ் சிங் அடிக்கிறார். குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் பஞ்சாப்பில் உள்ள அவர்களின் வீட்டின் முன்பு நடந்ததும், சிசிடிவியில் பதிவான காட்சிகள் வீடியோவாக வெளியானதும் தெரியவந்துள்ளது.
மகளிர் ஆணையம் விசாரணை
இதையடுத்து பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பெண் எம்எல்ஏ ஒருவருக்கே இந்த நிலையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே சம்பவம் குறித்து பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றுள்ளது. அந்த ஆணையத்தின் தலைவி மனிஷா குலாட்டி , ‛‛நான் சமூக வலைதளத்தில் பல்ஜிந்தர் கவுரை தாக்கும் வீடியோவை பார்த்தேன். இதுபற்றி தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளோம். பொதுப்பிரச்சனைகளை தீர்க்க போராடும் பெண் எம்எல்ஏ அவரது வீட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாவது வருத்தமளிக்கிறது'' என கூறியுள்ளார்.
பஞ்சாப் நிலவரம் என்ன?
மேலும் சமீபத்திய தேசிய குற்ற ஆவண காப்பத்தின் விபரங்கள் படி 2021ல் பஞ்சாப்பில் பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது 17 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 2020 இல் 4,838 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் கடந்த ஆண்டு 5,662 வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில் தான் பெண் எம்எல்ஏ மீது அவரது கணவர் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.