பரபரக்கும் பஞ்சாப்.. 65 தொகுதிகளில் பாஜக போட்டி.. அமரீந்தர் சிங் கட்சிக்கு 37 தொகுதிகள்.. நட்டா தகவல்!
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக, கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிக்களிடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பாஜக 65 தொகுதிகளிலும், அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) 15 தொகுதிகளிலும் போட்டியிடும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
நடைபெற உள்ள 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதனால் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அனல் பறக்கும் தேர்தல் களம்
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, அகாலிதளம் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளதால் தேர்தல் பிரசாரக்களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது.

பாஜக உடன் அம்ரீந்தர் சிங் கூட்டணி
புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை இந்தக் கூட்டணி அளிக்கும் எனத்தெரிகிறது. அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கியுள்ளதாக ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சிக்கல் எழுந்துள்ளது.

தொகுதி பங்கீடு
பாஜக கூட்டணிக்கட்சிகளிடையே போட்டியிட உள்ள தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பாஜக, கூட்டணிக்கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று அறிவித்துள்ளார். அதன்படி பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக 65 தொகுதிகளில் களம் காண்கிறது. அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) 15 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வே சொல்வது என்ன?
பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் ஏபிபி சி வோட்டர் சர்வேபடி பஞ்சாப்பில் இந்த முறை தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக வெறும் 1, 2 அல்லது அதிகபட்சம் 3 இடங்களை மட்டுமே வெல்லும் என்று ஏபிபி சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. விவசாய சட்டங்கள் ரத்து ஆனாலும் கூட பஞ்சாப் விவசாயிகள் பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

பலமடையும் ஆம் ஆத்மி
அங்கு ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தொடர்ந்து டெல்லி தலைமையின் முடிவுகளுக்கு எதிராக செயல்படுவதால் அங்கு பஞ்சாப் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவாக முடியும். அதே சமயம் விவசாயிகள் மத்தியில் ஆதரவு கொண்ட சிரோன்மணி அகாலி தளம் கட்சி இந்த முறை பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications