"ம்ஹூம்.. எந்த அதிசயமும் பஞ்சாப்பில் காங்கிரஸை காப்பாற்ற முடியாது.." மத்திய அமைச்சர் சுளீர்
சண்டிகர்: பஞ்சாப்பில் காங்கிரஸை எந்த அதிசயத்தாலும் காப்பாற்ற முடியாது என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
177 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

காங்கிரஸ்
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பஞ்சாப் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வாகி இருக்கிறார். இதற்கு காரணம் சரண்ஜித் தலித் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 32 சதவிகிதம் மக்கள் தலித். அவர்களின் வாக்கு வங்கியை மொத்தமாக பெறவே, தலித் சீக்கியரை முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி களமிறக்கியுள்ளார்.

விமர்சனம்
முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானதும், அம்மாநில அரசியல் கட்சிகள் இதுகுறித்து விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸின் அறிவிப்பு குறித்து பதிலளித்துள்ள மத்திய மந்திரியும், பஞ்சாப் பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத், ஏற்கனவே அழிந்து விட்ட கட்சியின் தலைவிதியில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.

கஜேந்தர சிங் ஷெகாவத்
கஜேந்தர சிங் ஷெகாவத் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''தவறான ஆட்சி, பரவலான ஊழல், உள்கட்சி பூசல் போன்றவற்றால் காங்கிரஸ் கட்சி சிதைந்து கிடக்கிறது, இப்போது ஒரு அதிசயம் கூட அதைக் காப்பாற்ற முடியாது. ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதால் கட்சியின் தலைவிதியை ஒருபோதும் மீட்க முடியாது. அதே நேரத்தில் இந்த அறிவிப்புக்குப் பிறகு கட்சியில் உட்பூசல் மேலும் தீவிரமடையும்.எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சில காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசில் நிலவும் ஊழல் குறித்து பொதுவெளியில் கூறுகிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

விலகல்
பாஜக மத்திய அமைச்சர் ஷெகாவத் குறிப்பிட்டது போலவே இருபத்து நான்கு மணி நேரத்தில் பஞ்சாப்பில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியலில் இருந்தே விலகுவதாக அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் அறிவித்துள்ளது பஞ்சாப் காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications