படுகொலையான பாடகர் சித்து மூசே வாலா.. குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான சித்து மூஸ் வாலாவின் தந்தையை நேரில் சந்தித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ஆறுதல் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் பிரபல பாடகரான சித்து மூஸ் வாலா. 28 வயதாகும் இவர், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் விஜய் சிங்லாவை எதிர்த்து போட்டியிட்டு 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து அண்மையில் மூஸ் வாலா வெளியிட்ட பாடலில், ஆம் ஆத்மி கட்சியினரையும், அவரது ஆதரவாளர்களையும் குறிவைத்து பாடல் வெளியிட்டார். இதனால் சமூக வலைதளங்களில் இவருக்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டது.
பஞ்சாப் அரசின் நடவடிக்கை
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஆம் ஆத்மி அரசு, மாநிலத்தில் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில், 400க்கும் மேற்பட்டோரின் போலீஸ் பாதுகாப்பை திரும்பப்பெற்றது. இதற்கு அடுத்த நாளே, பாடகர் சித்து மூஸ் வாலாவை மர்ம கும்பல் ஒன்று அவரது சொந்த கிராமத்தில் சுட்டுப் படுகொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்து உடல் தகனம்
சித்து மூஸ் வாலா கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. இவரது உடல் அவரது சொந்த ஊரான தகனம் செய்யப்பட்டபோது, ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டனர். தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளால் வலியுறுத்தப்பட்டது.
அமித் ஷாவை சந்தித்த மூஸ் வாலா தந்தை
தொடர்ந்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக்கோரி சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரதாப் சிங் பாஜ்வா கூறுகையில், சித்து மூஸ் வாலா கொலை வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ-விடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவரது மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி ஆறுதல்
சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்டபோது வெளிநாட்டில் இருந்த ராகுல் காந்தி, கடந்த வார இறுதியில் நாடு திரும்பினார். பின்னர் இன்று காலை சண்டிகர் விமான நிலையம் வந்த அவர், மூசா கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவருடன் பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளான பிரதாப் சிங் பாஜ்வா, ஓபி சோனி உள்ளிட்டோர் இருந்தனர்.