அடப்பாவமே.. மளிகை கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்ட 1.5 வயது குழந்தைக்கு ரத்த வாந்தி.. என்ன நடந்தது
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மளிகைக் கடையில் வாங்கிய காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட ஒன்றரை வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது..
நமது நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது. இருப்பினும், அதையும் தாண்டி சில மோசமான தவிர்க்க முடியாத சம்பவங்கள் நடந்துவிடும்.

ஷாக் சம்பவம்: அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள பாட்டியாலா என்ற பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வாங்கிய காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்ட ஒன்றரை வயது சிறுமி ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் தான சாக்லேட்டுகள் காலாவதியானது என்பது தெரியவந்தது.
லூதியானாவைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது பெற்றோருடன் பாட்டியாலாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். உறவினரான விக்கி கெஹ்லாட் அந்த சிறுமியை அருகே மளிகைக் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே ஆசையாக அந்த சிறுமிக்கு சாக்லேட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.
ரத்த வாந்தி: வீடு திரும்பிய சிறுமி உறவினர் கொடுத்த அந்த சாக்லேட்டை ஆசை ஆசையாகச் சாப்பிட்டுள்ளார். இருப்பினும் அதைச் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த சிறுமியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது. கொஞ்ச நேரத்திலேயே அந்த சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. இதையடுத்து அந்த சிறுமி கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் சிறுமி சாப்பிட்ட ஏதோ ஒரு பொருள் அவருக்கு விஷமாக மாறியதே அவரது உடல் நலக்குறைவுக்குக் காரணம் என்பது தெரிய வந்தது. அச்சிறுமிக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் போலீசார் மற்றும் மாநில சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தனர்.
விசாரணையில் பகீர்: இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற சுகாதாரத் துறையினர் அவர்கள் சாக்லேட் வாங்கிய அந்த மளிகைக் கடைக்குச் சென்று விசாரித்துள்ளனர். மேலும், மாதிரிகளைச் சேகரித்தனர். அப்போது தான் அந்த கடையில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கப்பட்டதை சுகாதாரத்துறை உறுதி செய்தது. இதையடுத்து கடையில் இருந்து காலாவதியான மற்ற உணவுப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றப்பட்டன.இது குறித்து அடுத்த கட்ட விசாரணையை அந்த குழுவினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
முதல்முறை இல்லை: இதே பஞ்சாபில் கடந்த மாதமும் இதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. கடந்த மாதம், பஞ்சாப் பாட்டியாலாவில் 10 வயது சிறுமி தனது பிறந்தநாளுக்கு ஆன்லைனில் கேக் ஆர்டர் செய்து அதை வெட்டியுள்ளார். பிறகு அந்த கேக் சாப்பிட்ட அந்த சிறுமிக்குப் புட் பாய்சன் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் உட்பட கேக் சாப்பிட்ட அனைவரும் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் அவர்கள் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தனர்.
அப்போது சுகாதார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தான் அந்த கேக் பேக்கரியில் தயாரிக்கப்படவில்லை.. மாறாக வேறு ஒரு இடத்தில் தயாரித்து போலி பெயரில் இயங்கி வந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுக்கு வந்த கேக் கெட்டுப் போய் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications