மரச் செக்கு எண்ணையில் கலப்படம்.. ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல்.. ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்
சென்னை: புற்றீசல்கள் போல பெருகிவிட்ட மரச் செக்கு எண்ணை வியாபாரத்திற்கு இடையே, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம், அல்லது ஆரோக்கியத்திற்கே தீங்கு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
தமிழர்கள் உணவில் அதிகம் சேர்க்கும் பொருட்களில் ஒன்றுதான் சமையல் எண்ணெய். வீடுகள் தொடங்கி ஹோட்டல்கள் வரை அனைத்து இடங்களிலும் சமையல் எண்ணெய்தான் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டு இருக்கிறது.
அதிலும் சமீப காலமாக, இயற்கை முறையில் கிடைக்கும் மரச் செக்கு எண்ணைதான் வேண்டும், அதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சொல்லும் வாடிக்கையாளர்கள் கணிசமாக அதிகரித்துவிட்டனர். ஆனால் நீங்கள் சுத்தமானது, தூய்மையானது என்று நினைத்து வாங்கும், மரச் செக்கு எண்ணை அனைத்துமே, சுத்தமானது கிடையாது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
மரச் செக்கு எண்ணையில் செய்யப்படும் கலப்படம் நமது உயிருக்கே ஆபத்தாக மாறலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இயற்கை முறையில் வேதிப்பொருள் கலப்பு இன்றி சமையல் எண்ணெய்யை பாரம்பரிய செக்கு முறையில் ஆட்டி உருவாக்குகிறோம் என்று நிறைய கடைகள், நிறுவனங்கள் பல இடங்களில் விளம்பரம் செய்கிறார்கள். இதை மக்களும் நம்பி வாங்குகிறார்கள்.
இதில் சில நிறுவனங்கள் ஏமாற்று பேர்வழிகளாக இருப்பதுதான் வேதனை. தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான செக்கு எண்ணெய் கடைகள் உள்ளது. அதிலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், இதுபோன்ற, மரச் செக்கு எண்ணை கடைகள் புற்றீசல்கள் போல பெருகிவிட்டன. இதில் சில கடைகள் எந்த விதமான அனுமதியும் இன்றி தொடங்கப்பட்டவை. சில நிறுவனங்கள் போலியான அனுமதியுடன் இயங்கி வருகிறது என்று அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எண்ணெய் நிறுவனங்களில் சில முழுக்க முழுக்க தரமற்ற வகையில் மரச் செக்கு எண்ணை உற்பத்தி செய்வதாக சமீபத்தில் வெளியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்த விலையில் மரச் செக்கு எண்ணை தருகிறோம் என்று இவர்கள் சொல்வதை கேட்டு நம்பி சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள், வாடிக்கையாளர்கள். மார்க்கெட்டில் இப்போது அதிக அளவில் செக்கு எண்ணெய் உற்பத்தி செய்கிறார்கள். இதில் எது உண்மையான செக்கு எண்ணெய் என்று பலருக்கும் தெரியவில்லை.
மர செக்கில் உருவாக்கப்படும் எண்ணெய் மட்டும்தான் சுத்தமாக இருக்கும். மிஷினை பயன்படுத்தினாலே எண்ணையின் தன்மை மாறிவிடுமாம். எனவே, மரச் செக்கு எண்ணை உற்பத்தியாகும் இடத்துக்கு நேரடியாக சென்று கண்முன்னே பார்த்து வாங்கினால்தான் பரவாயில்லை. கடைகளுக்கு வரும்போது அதில் கலப்படம் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இது போன்ற கலப்படம் நிறைந்த மரச் செக்கு எண்ணெய்களை பயன்படுத்துவது உடலுக்கு பெரிய பிரச்சனைகளை கொண்டு வரும். முக்கியமாக, இதயத்திற்கு இது நிறைய பிரச்சனைகளை கொண்டு வரும். ஆகவே மரச் செக்கு எண்ணெய் வாங்கும் போது கவனமாக வாங்க வேண்டும்.
நீங்கள் வாங்கும் மரச் செக்கு எண்ணை தரமானதுதானா என்பதை அறிய, உணவு பாதுகாப்பு துறையிடம் அளித்து இதை சோதனை செய்து பார்க்கலாம். அதுவும் இலவசமாக. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு கழகம் சார்பாக உணவு கலப்பட சோதனைகளை இலவசமாக செய்து உங்கள் எண்ணெய்யில் கலப்படம் இருக்கிறதா, இல்லையா என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான், நீங்கள் சமையல் செய்ய பயன்படுத்தும் மரச் செக்கு எண்ணெயை உணவு பாதுகாப்பு துறையின் பரிசோதனை மையத்தில் கொடுத்து சரி பாருங்கள். அதில் அவர்களே அனைத்து சோதனைகளையும் செய்ய்துவிட்டு கடைசியில் அந்த எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டதா, அல்லது கலப்படம் செய்யவில்லையா என்று கூறிவிடுவார்கள்.
எண்ணெய் கெடாமல் இருக்கவும், நல்ல நிறம் கொடுக்கவும் நிறைய மோசமான வேதிப்பொருள்களை மரச் செக்கு எண்ணையில் சிலர் கலந்து வருகிறார்கள். இதை சோதனை மூலம் எளிதாக கண்டுபிடித்திவிடலாம். அதன்பின் நீங்கள் அதுபோன்ற நிறுவனங்களின் மரச் செக்கு எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
மரச் செக்கு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை, வரலாறு, அவர்கள் எண்ணெய் தயாரிக்கும் முறை என்று பல விஷயங்களை ஆராய்ந்துதான் எண்ணெய் வாங்க வேண்டும். FSSAI என்பது உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பின் ஆங்கில பெயராகும். இந்த முத்திரை செக்கு எண்ணை பாக்கெட்டின் மீது இருக்கிறதா என்பதை கவனியுங்கள். அப்படி இல்லாவிட்டால், அந்த மரச் செக்கு எண்ணைக்கு தரச்சான்று கிடைக்கவில்லை என்பது பொருள். ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து. எனவே, உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள, மரச் செக்கு விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருங்கள் மக்களே!
RECOMMENDED STORIES