கேரளாவில் 'டவ் தே' புயலில் சிக்கி.. நடுக்கடலில் படகு கவிழ்ந்தது.. நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்!
சென்னை: கேரளாவில் டவ் தே புயலில் சிக்கி நாகை மாவட்டத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.
தமிழக, கேரள அரசு மற்றும் மத்திய அரசு மீனவர்களை மீட்டு தர வேண்டும் என்று கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டவ் தே புயல் அதிதீவிரம்
கேரளாவை புரட்டி போட்ட டவ் தே புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இன்று காலை நிலவரப்படி டவ்-தே புயலானது அரபிக் கடலில் கோவாவுக்கு தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும் மும்பைக்கு தெற்கே 490 கி.மீ தொலைவிலும் குஜராத்தின் போர்பந்தர், மகுவாவில் இருந்து 730 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது.

நாகை மீனவர்கள்
இந்த புயலால் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியதாலும், கடல்நீர் உட்புகுந்ததாலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையை சேர்ந்த மணிகண்டன்(23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தந்தை இடும்பன்(50), அண்ணன் மணிவேல்(27) உள்பட 10 மீனவர்கள் கொச்சியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

நடுக்கடலில் மாயம்
கடந்த 2-ம் தேதி கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து வந்தனர். டவ் தே புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் உடனடியாக கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி நிலைகுலைந்த படகு கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மற்ற மீனவர்கள் சாமந்தான்பேட்டை கிராமத்துக்கும், எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஒரே கிராமத்தில் சோகம்
கடலில் மாயமான மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனை தொடர்ந்து மீனவர்களின் உறவினர்கள், பெண்கள் மீனவர்களை மீட்டுத் தரக்கோரி கதறி அழுவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாயமான மீனவர்க்ளை மீட்டுத் தரக்கோரி தமிழக, கேரள அரசு மற்றும் மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர்கள் மாயமானது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்தும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மாயமானது சோகத்தை ஏற்படுதித்தியுள்ளது.












Click it and Unblock the Notifications