ரேஷன் கடைகளுக்கு 2022ம் ஆண்டு எப்போதெல்லாம் விடுமுறை தெரியுமா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் ரேசன்கடைகளுக்கு 2022ம் ஆண்டு 12 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதுதவிர வழக்கம்போல வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை நாட்களும் உள்ளன.
இந்த விடுமுறை நாட்களை குறித்துவைத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக குடும்பங்களுக்கு 2,20,14,963 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 6,88,72,049 பேர் பயனடைந்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் 13 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு-3 நாட்களில் 68 பேர் கைது- ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக்
சுமார் 6.82 கோடி பயனாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் 34,773 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 309 இடங்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2,20,14,963 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் கொடுப்பட்டு அதில் 6,88,72,049 பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளில் இதுவரை 6,82,26,416 பேரின் ஆதார் எண்களும், 2,19,63,005 பேரின் செல்போன் எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கடையில் வாங்கப்படும் பொருட்களின் விவரங்கள் பயனாளர்களின் செல்போன எண்ணிற்கு குறுஞ்செய்தியாக சென்றுவிடுவதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கப்பட்டதுபோல் போலி கணக்குகள் எழுதுவது குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 39 மாவட்டங்களில் உள்ள 314 தாலுகாவில் உள்ள 243 கிடங்குகளில் உணவு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. PHH என்ற ரேஷன் அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை குடும்ப அட்டை என்பதாகும். இந்த அட்டைக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். PHH-AYY என்ற ரேஷன் அட்டைகளுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா என்று பெயர். இதற்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH என குறிப்பிடப்படுபவை முன்னுரிமையற்ற அரிசி குடும்ப அட்டைகள் என்று பொருள்படும். இந்த அட்டைக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH-S என்ற ரேஷன் அட்டைகள் முன்னுரிமையற்ற சர்க்கரை அட்டைகள் என்று பொருள்படும். இதற்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். NPHH-NC என குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் பொருட்களில்லா அட்டை எனப்படும். இதற்கு எந்தவிதப் பொருட்களும் கிடைக்காது. இருப்பிட அடையாளத்திற்காக மட்டும் வைத்திருக்கும் ரேசன் அட்டை என்று இந்த அட்டையை குறிப்பிடுகின்றனர். 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள், கரும்பு, துணி பை என, 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை ஜனவரி 3ம் தேதி முதல் வழங்க உள்ளது. இதற்காக, 1,160 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
ஒரே ரேஷன், ஒரே நாடு
2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பம் ஒரு ரேஷன் அட்டையின் மூலம் நாடு முழுவதும் எந்த ரேஷன் கடைக்கும் சென்று உணவு பொருட்களை பெற முடியும். இந்தியா முழுவதும் பணிநிமித்தமாக இடம்பெயரும் தொழிலாளர்களுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மாநிலத்தில் பதிவுசெய்துள்ள பயனாளி, மற்றொரு மாநிலத்தில் உணவுப் பொருட்களைப் பெறும்போது, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மட்டுமே உணவுப் பொருட்களைப் பெற முடியும். அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களையோ, இலவச உணவு பொருட்களையோ முடியாது. அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், வழக்கம்போல உணவுப் பொருட்களைப் பெறலாம். தங்களுக்கான ரேஷன் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் இந்த திட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம்
2022 ரேஷன் கடைகள் விடுமுறை நாட்கள்
இந்நிலையில் 2022ம் ஆண்டிற்கான ரேஷன் கடை விடுமுறை நாட்களை தமிக அரசு அறிவித்துள்ளது. அதன்படி (1) பொங்கல் பண்டிகை ஜனவரி 14, வெள்ளி (2) தைப்பூசம் ஜனவரி 18, செவ்வாய், (3) குடியரசு தினம் ஜனவரி 26, புதன், (4) தமிழ்ப்புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் / மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 14 வியாழன், (5) மே தினம் மே 1, ஞாயிறு, (6) ரம்ஜான் மே 5, செவ்வாய் (7) சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, திங்கள், (8) விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31, புதன் (9) காந்தி ஜெயந்தி அக்டோபர் 2, ஞாயிறு, (10) விஜயதசமி அக்டோபர் 10, புதன், (11) தீபாவளி அக்டோபர் 24, திங்கள், (12) கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆகிய 12 நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்து தமிக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதுதவிர வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாட்களும் இருக்கின்றன. இந்த விடுமுறை நாட்களை குறித்து வைத்துக் கொண்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை தகுந்த நாட்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது