சாலையில் காத்திருக்கும் எமன்.. உத்தர பிரதேசத்தை விட தமிழ்நாடு ரொம்ப மோசம்.. மத்திய அரசு ஷாக் தகவல்
சென்னை: சாலையில் இருக்கும் குண்டும், குழியால் ஏற்படும் விபத்து மற்றும் உயிர் பலி தொடர்பான விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில் உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் கூட விபத்து, பலி எண்ணிக்கை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் குறைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன்மூலம் சாலை பள்ளம் சார்ந்த விபத்து, பலியை கட்டுப்படுத்துவதில் உத்தர பிரதேசத்தை விட மோசமான நிலையில் தமிழ்நாடு உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் பல ஆயிரம் பேர் மரணமடைந்து வருகின்றனர். வாகனங்கள் ஒன்றொடொன்று மோதி கொள்ளும் விபத்தில் அதிகளவில் உயிர் பலி ஏற்பட்டாலும் கூட மற்றொரு புறம் சைலன்ட் கில்லராக இன்னொரு வழியிலும் ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர்.
அதாவது சாலையில் இருக்கும் பள்ளத்தாலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் கணிசமான அளவில் மக்கள் மரணமடைகின்றனர். இதில் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தான் விபத்தில் சிக்கி உயிரை பறி கொடுக்கின்றனர்.

சாலை பள்ளத்தால் விபத்து
இந்நிலையில் தான் 2021ல் இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக சாலை பள்ளத்தால் ஏற்பட்ட உயிர் பலி தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகள் மற்றும் உயிர் பலி தொடர்பான கேள்விக்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் எழுத்து பூர்வமாக பதிலளித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2020யை விட 2021ல் குறைவு
கடந்த 2019ல் சாலை பள்ளத்தால் மொத்தம் 4,775 விபத்துகள் ஏற்பட்டன. இதில் 2,140 பேர் இறந்தனர். கடந்த 2020ல் ( கொரோனா ஊரடங்கால் வாகனங்கள் முழுமையாக இயங்கவில்லை)3,564 விபத்துகள் நிகழ்ந்த நிலையில் 1,471 பேர் மரணமடைந்தனர். 2021ல் 3,625 விபத்துகளில் 1,481 பேர் இறந்துள்ளனர். கடந்த 2020யை காட்டிலும் 2021ல் சாலை பள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தமிழகத்தில் விபத்து, பலி அதிகரிப்பு
மாநிலங்கள் வாரியாக பார்த்தால் 2021ல் மத்திய பிரதேசத்தில் சாலை பள்ளம் காரணமாக 711 விபத்துகள் நடந்த நிலையில் 220 பேர் பலியாகி உள்ளனர். இங்கு கடந்த 2019ல் 339 விபத்துகளி்ல 91 பேரும், 2020ல் 439 விபத்துகளில் 96 பேரும் இறந்திருந்த நிலையில் கடந்த ஆண்டு கூடுதலாக 124 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் சாலை பள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் என்பது கடந்த 2019, 2020 ஆண்டை விட 2021ல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019ல் சாலையில் உள்ள பள்ளம் காரணமாக ஏற்பட்ட 502 விபத்துகளில் 93 பேர் பலியாகினர். கடந்த 2020ல் 385 ஆக விபத்துகள் சரிந்த நிலையில் பலியும் 46 ஆக குறைந்ததிருந்தது. இந்நிலையில் தான் 2021ல் சாலை பள்ளம் தொடர்பான விபத்து என்பது 459 ஆக அதிகரித்துள்ளதோடு, 109 பேர் உயிரை பறிகொடுத்துள்ளனர். இது கடந்த 2020ம் ஆண்டை விட அதிகமாகும்.

பெட்டராகி வரும் உத்தர பிரதேசம்
மேலும் கடந்த 2021ல் சாலை பள்ளம் தொடர்பான விபத்துகளில் அதிக உயிர் பலி என்பது உத்தர பிரதேசத்தில் தான் நடந்துள்ளது. 2021ல் மொத்தம் 1,254 விபத்தில் 649 பேர் இறந்துள்ளனர். மேலும் 2021ல் சாலை பள்ளத்தால் அதிக பலி ஏற்பட்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தர பிரேதசம் முதலிடத்திலம், ராஜஸ்தான் 2வது இடத்திலும், தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளன. இருப்பினும் கூட கடந்த 2020 ஆண்டை ஒப்பிடும்போது சாலை பள்ளத்தால் ஏற்படும் விபத்து மற்றும் பலி எண்ணிக்கையை பெருமளவு உத்தர பிரதேசம் கட்டுப்படுத்தி உள்ளது.

உபியை விட தமிழ்நாடு மோசம்
அதாவது உத்தர பிரதேசத்தல் கடந்த 2019ல் 2,122 விபத்துகளில் 1034 பேர் இறந்தனர். அதன்பிறகு 2020ல் 1,447 விபத்துகள் நடந்த நிலையில் பலி எண்ணிக்கை 759 ஆக சரிந்துள்ளது. இது கடந்த 2021ல் இன்னும் பெட்டராக விபத்துகளின் எண்ணிக்கை 1,254 என குறைந்ததோடு பலியானவர்களின் எண்ணிக்கை அதிர்ஷ்டவசமாக 649 என்ற அளவில் குறைந்துள்ளது. இதன்மூலம் சாலை பள்ளம் தொடர்பான விபத்துகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உத்தர பிரதேசத்தை விட ராஜஸ்தான், தமிழ்நாடு மாநிலங்கள் பின்தங்கி உள்ளன.

பூஜ்ஜிய விபத்து மாநிலங்கள்
இதுதவிர கடந்த 2019, 2020, 2021 ஆகிய மூன்றாண்டுகளிலும் பீகார், திரிபுரா, கடந்த 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆந்திரா, மேகாலயா, சிக்கிம், கோவா மாநிலங்களில், 2021ல் உத்தரகாண்ட் மாநிலத்திலும் சாலை பள்ளம் தொடர்பான விபத்துகளும், பலியும் பூஜ்ஜியமாக உள்ளது. மேலும் மிசோராமிலும் கடந்த 2019, 2021ல் சாலை பள்ள விபத்து பூஜ்ஜியமாக பதிவாகி உள்ளது.

தென்இந்திய மாநிலங்கள் நிலவரம்
மேலும் தென்இந்திய மாநிலங்களை பார்த்தால் ஆந்திராவில் பூஜ்ஜிய விபத்து உள்ளது. கர்நாடகாவை பொறுத்தமட்டி்ல கடந்த ஆண்டு சாலை பள்ளம் தொடர்பா 16 விபத்துகள் ஏற்பட்ட நிலையில் 6 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவிலும் 16 விபத்தில் 6 பேரும், தெலங்கானாவில் 87 விபத்துகளில் 29 பேரும் பலியாகி உள்ளனர். மேலும் குஜராததை பொறுத்தமட்டில் கடந்த 2020ல் 6 விபத்தில் 6 பேரும், 2021ல் 8 விபத்தில் 6 பேரும் பலியாகி உள்ளனர். மேற்கு வங்காளத்தை பொறுத்தமட்டில் கடந்த 2021ல் 64 விபத்துகளில் 28 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 1,418 பேர் பலி
இது ஒருபுறம் இருக்க கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் சாலை பள்ளம் தொடர்பான விபத்து, பலி எண்ணிக்கை ஆகியவை மாநிலங்கள் வாரியாக கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2021ல் மொத்தம் 1,418 பேர் சாலை பள்ளம் தொடர்பான விபத்தில் இறந்துள்ளனர். இதுதான் கடந்த 2013ல் 2021 வரையிலான 9 ஆண்டுகளில் ஒரு வருடத்தில் பதிவான மிகக்குறைந்த உயிர் பலி என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications