25 இருக்கட்டும்.. 5 கேபினட் அமைச்சர்கள் உறுதி.. அடித்துச் சொன்ன அண்ணாமலை.. அதுதான் காரணமாம்!
சென்னை : மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பிக்கள் பாஜகவுக்கு கிடைப்பார்கள், அதில் 5 பேர் கேபினட் அமைச்சர்களாவது உறுதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் மெகா கூட்டணியை பாஜக அமைக்க திட்டமிடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதிமுக கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட பாஜக தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் டெல்லி சென்று திரும்பிய பின்னர், பாஜக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திய அண்ணாமலை, ஐந்து ஆறு சீட்டுகளுக்காக யாரிடமும் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனப் பேசியதாகத் தகவல் வெளியானது.
இதனால், பாஜக தனித்து நிற்க ரெடியாகி விட்டது என்ற பேச்சுகள் ஓடி வருகின்றன. பாஜக 25 இடங்களில் வெல்வது உறுதி என தொடர்ந்து பேசி வருவதும் இதை ஒட்டித்தான் என்கிறார்கள்.

பாஜக கூட்டணி
பாஜக தேசிய தலைமை, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்க முயன்று வருவதாகச் சொல்லப்பட்டது. சில கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையையும் டெல்லி தலைமை நடத்தியதாக கூறப்பட்டது. இதற்கிடையே, அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய கட்சியான அதிமுக தலைமையில் கூட்டணி என்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அதனை ஏற்றுக்கொண்டார்.

பாஜக என்ன கதை
இதுஒருபுறம் இருக்க, அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பலரும் 25 எம்.பி சீட்களில் பாஜக வெல்லும் என தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக 25 சீட்களில் வெல்லும் என்றால், அதிமுக பாஜகவை விட குறைவான சீட்களில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்தது. அதேசமயம், பாஜக தலைமை, ஓபிஎஸ்ஸுடன் இணைய வேண்டும் என வற்புறுத்தினால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பாஜக கூட்டணியில் இருந்து முறித்துக் கொள்ளும் திட்டத்தில் இருப்பதாகவும் தகவல்கள் உலவின.

25 எம்பிக்கள் செல்வார்கள்
இந்நிலையில் தான், அதிமுக கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்கிற ரீதியில் அண்ணாமலையின் பேச்சுகள் இருந்து வருகின்றன. அதுவும் குறிப்பாக, அண்ணாமலை சமீபத்தில் டெல்லி சென்று வந்த பிறகு, கூட்டணி தொடர்பாக பாஜகவின் கணக்கு மாறி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அண்ணாமலையிடம் டெல்லி புள்ளிகள், தமிழக அரசியல் நிலை, லோக்சபா தேர்தல் பற்றியும், கட்சியின் வளர்ச்சி பற்றியும் ஆலோசித்தனர்.

டெல்லியில் இருந்து திரும்பியதுமே
டெல்லியில் இருந்து வந்ததுமே, கமலாலயத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் அண்ணாமலை. அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து, ஆறு சீட்களுக்காக யாரிடமும் தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலை இல்லை. அவர்கள் கொடுக்கும் தொகுதியில் போட்டியிட்டு ஒன்று இரண்டு சீட்கள் பெறுவது நம் இலக்கு அல்ல. கட்சியை வளர்ப்பது முக்கியம் எனப் பேசியதாக தகவல் வெளியானது.

தனித்துப் போட்டி
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றோம். அதே போல், மக்களவைத் தேர்தலிலும் பாஜக தனித்துப் போட்டியிடும். இதை பிரதமரிடமும் நான் தெரிவித்துவிட்டேன். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம். எனவே தனித்து போட்டிடும் அளவுக்கு நாம் வளர்ந்தாக வேண்டும், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

2, 3 சீட்டை விட
இதனால் தான் பாஜகவிலிருந்து 25 எம்.பிக்கள் டெல்லி செல்வார்கள் என்று அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார் என்கிறார்கள். பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகள் கிடைப்பதே அரிது என்ற சூழலில், பாஜகவில் இருந்து 25 எம்.பிக்கள் டெல்லி செல்வார்கள் என அண்ணாமலை பேசி வருவதன் பின்னணி இதுதான், அதிமுகவை விட்டுவிட்டு தனித்துப் போட்டியிட பாஜக தயாராகிவிட்டது, 2,3 சீட்களில் வெற்றி பெறுவதை விட வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என தயாராகி விட்டார் அண்ணாமலை என்கிறார்கள்.

5 கேபினட் அமைச்சர்கள்
நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற 'மாற்றத்துக்கான மாநாடு' பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்.பிக்கள் பாஜகவுக்கு கிடைப்பார்கள். அதில், 5 பேர் கேபினட் அமைச்சர்களாவது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.

அடித்துச் சொல்லும் அண்ணாமலை
பாஜகவை தனித்துப் போட்டியிட்டு வெல்லும் அளவுக்கு பலப்படுத்தும் முயற்சிகளை அண்ணாமலை தொடங்கிவிட்டார். பாஜகவில் உழைத்தால், நிச்சயம் சீட் கிடைக்கும், வென்றால் மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்கும் என கட்சியினருக்கு உணர்த்தும் வகையிலேயே அண்ணாமலை இவ்வாறு பேசி வருகிறார் என்கின்றனர் பாஜக வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications