சென்னையில் 2 வது விமான நிலையம்... எங்கு எப்போது வரப்போகிறது தெரியுமா?
சென்னை: இந்தியாவின் மிக முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி காரணமாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் தினசரி வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகியுள்ளது.
இதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு தொடங்கிவிட்டது.

2 வது விமான நிலையம்
அதே நேரம் நிர்வாக காரணங்களுக்காக சென்னையில் மேலும் ஒரு விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இதற்கான இடத்தை பரிந்துரைக்குமாறும் மாநில அரசிடம் மத்திய அரசு கோரி இருந்தது.
இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, சென்னைக்கு வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் குழு பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டது.

2 இடங்கள் பரிந்துரை
அதன் அடிப்படையில் எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்பது குறித்து விரிவான அறிக்கையையும் அந்த குழு தயாரித்து இருக்கிறது. இந்த 4 இடங்களில் இரண்டை அந்த குழு தேர்வு செய்துள்ளது. அதில் ஒன்று பரந்தூர், மற்றொன்று பன்னூர். படாளம் மற்றும் திருப்போரூரில் விமான நிலையம் அமைப்பதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக அந்த குழு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

இரண்டில் ஒன்றை தமிழ்நாடு அரசு இறுதி செய்யும்
இந்த அறிக்கை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கார்ப்பரேசன் (டிட்கோ)வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டில் ஒரு இடத்தை தமிழ்நாடு மாநில அரசு தேர்வு செய்து மத்திய அரசிடம் தெரிவிக்கும். இவ்விரு பகுதிகளின் நில மதிப்பீடு மற்றும் காலி இடங்களை அடிப்படையாக கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

2,000 - 3,000 ஏக்கர் தேவை
சென்னையில் அமைக்கப்பட இருக்கும் 2 வது விமான நிலையத்துக்கு 2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம் தேவைப்படும். எனவே இதுகுறித்து தமிழ்நாடு அரசிடம் டிட்கோ உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய இருக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தொழில்நுட்ப ஆய்வுகள், சாத்தியக்கூறுகள், சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து இடம் இறுதி செய்யப்படும்.

5 ஆண்டுகளில் விமான நிலையம்
இதனை தொடர்ந்து மத்திய அரசால் அமைக்கப்படும் வழிகாட்டுதல் குழு அந்த இடத்துக்கு ஒப்புதல் வழங்கும். அதன் பின்னர் இங்கு விமான நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அனுமதிகளையும், தடையில்லா சான்றுகளையும் பெற வேண்டும். இதன் பின்னர் துரிதமாக பணி செய்தால் 5 ஆண்டுகளில் விமான நிலையம் தயாராகிவிடும்.












Click it and Unblock the Notifications