ஷேர் மீ செயலியில் லைக் போட்டால் காசு.. டிசைன் டிசைனாக ஏமாற்றிய சென்னையை சேர்ந்த 3 பேர் கைது
சென்னை: சென்னையில் Share me செயலி மூலம் பணம் திருட்டு வழக்கில் 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தப்பிய குற்றவாளிகளுள் ஒருவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேட்டில் வசித்து வருபவர் தினேஷ் (28). இவர் கடந்த சில மாதங்களாக வேலை தேடி வந்துள்ளார். பின் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்க, கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தனியார் நிறுவனத்தில் தினேஷ் பணிபுரிந்துள்ளார்.
அப்போது தினேஷ் தனது நண்பன் சுந்தர் என்பவரின் வழிகாட்டுதலின்படி Share Me என்ற செயலியை தனது செல்போனில் App Link மூலம் பதிவிறக்கம் செய்துள்ளார்.

செயலி
அதில் 30 ஆயிரம் ரூபாய் கட்டி அந்த செயலியில் வரும் வீடியோக்களை லைக் செய்து அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து Share Me என்ற செயலியில் பதிவேற்றம் செய்தால் ஒரு ஸ்கிரின் ஷாட்டிற்கு 18 ரூபாய் வீதம் நாள் ஒன்றுக்கு 1,800 ரூபாயும், மாதத்திற்கு 54 ஆயிரம் ரூபாயும் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பியுள்ளார்.

லோகேஷ்
இதுபோல் தனது நண்பன் லோகேஷ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளதை அறிந்த தினேஷ் தானும் அதேபோல் பணம் செலுத்த முற்பட்டுள்ளார். பின்பு தன்னிடம் போதிய பணம் இல்லாததால் ரூபாய் 3 ஆயிரத்தை மட்டும் கடந்த மாதம் 30 ஆம் தேதி செயலியில் வழங்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

செயலி நிறுத்தம்
இதனையடுத்து சில தினங்களுக்குப் பிறகு அந்நிறுவனம் அந்த செயலியை நிறுத்தி விட்டதால் தான் ஏமாற்றப்பட்டதையும், தன்னைப் போலவே பல நபர்கள் இதே மோசடியால் ஏமாற்றப்பட்டு இருப்பதையும் அறிந்த தினேஷ் தன்னை ஏமாற்றிய செயலியைச் சார்ந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மாதவரம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு
தினேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீசார் Share Me செயலி குறித்தும், அதன் இயக்கம் குறித்தும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சையது பக்ருதீன், மீரான் மொய்தீன் மற்றும் முகமது மானஸ் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அன்சாரியை போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications