அனுமதி வழங்கிய முதல் நாளே இப்படி ஒரு சம்பவமா?.. மெரினா கடலில் குளித்த 3 சிறுவர்கள் மாயம்
சென்னை: மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வேளச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 3 பேர் கடலில் குளித்த போது மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடலோர காவல் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாயமான சிறுவர்கள், பெயர்கள், விமல், சபரிநாதன் மற்றும் தர்மராஜ் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, இத்தனை மாதங்களுக்கு பிறகு கடற்கரைக்கு வந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அங்கு வந்திருந்த, ஆண்கள் மற்றும் பெண்கள் பலரும் தெரிவித்தனர். பொழுதுபோக்கிற்கு எங்கே செல்வது என்று தெரியாமல் இத்தனை நாட்களாக முடங்கிக் கிடந்ததால், மன உளைச்சலில் இருந்ததாகவும், இருப்பதால் இங்கு வருகை தந்திருப்பது மனதுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்ததை கவனிக்க முடிந்தது.
கும்முடிபூண்டியைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், மெரினா கடற்கரை பொதுமக்கள் வருகைக்காக இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து மனச்சோர்வு ஏற்பட்டதால் இங்கு வந்தோம். முதல் நாள் என்பதால் பெரிதாக கூட்டம் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் திங்கள்கிழமை வார நாள் என்ற போதிலும் கூட அதிகப்படியான மக்கள் கடற்கரைக்கு வந்து இருக்கிறார்கள். அனைவருமே கடற்கரையை ரொம்பவே மிஸ் செய்திருக்கிறார்கள், என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்தார்.
சுற்றுலா வருவோர் ஒரு பக்கம் என்றால், அவர்களை நம்பி வியாபாரம் செய்பவர் தொழிலும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சுண்டல் உள்ளிட்ட நொறுக்குத்தீனி விற்பனை செய்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புகைப்பட கலைஞர்களும் சுற்றுலா பயணிகளுக்கு புகைப்படம் எடுத்துக் கொடுத்து வருவதை பார்க்க முடிந்தது. அதேநேரம், ஆர்வமிகுதியால் 3 சிறுவர்கள் கடலின் உள்ளே சென்று குளித்து, அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications