தமிழ்நாட்டில் 33 பேரூராட்சிகள்.. நகராட்சிகளாக தரம் உயர்கிறது? அரசு ஆலோசனை.. எந்தெந்த ஊர்?
சென்னை: தமிழகத்தில் குன்றத்தூர், மாங்காடு, மாடம்பாக்கம், பெருங்களத்தூர், அவினாசி, பெருந்துறை, கருமத்தம்பட்டி33 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன், அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 148 நகராட்சிகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட அந்த பேரூராட்சியில் 30 ஆயிரம் அல்லது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 33 பேரூராட்சிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையை பெற்றிருப்பதால் அந்த பேரூராட்சிகள் அனைத்தையும் நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாம்-

செங்கல்பட்டு மாவட்டம்
எந்தெந்த மாவட்டத்தில் எந்த பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதன்படி விவரங்களை இப்போது பார்ப்போம்: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், மாங்காடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், கூடுவாஞ்சேரி, திருநீர்மலை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி.

சேலம்
கடலூர் மாவட்டத்தில் வடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோழிங்கர். சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, தாரமங்கலம், இடங்கனசாலை.

ஈரோடு
கரூர் மாவட்டத்தில் பள்ளப்பட்டி. ஈரோடு மாவட்டத்தில் 'பெருந்துறை-கருமாண்டி செல்லிபாளையம்', திருப்பூர் மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி, அவினாசி, கோவை மாவட்டத்தில் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, தஞ்சை மாவட்டத்தில் அதிராமபட்டினம், தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம்.

தூத்துக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், நெல்லை மாவட்டத்தில் களக்காடு, பணகுடி, வடக்கு வள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொள்ளங்கோடு ஆகிய 33 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாம்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது . 33 பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டால் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகராட்சிகளின் எண்ணிக்கை உயரும். உண்மையில் நகராட்சியாக பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டால் அங்கு வளர்ச்சி பணிகள் அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications