4,379 ஓட்டு ஷாக்! விஜய பிரபாகரன் அப்போ அப்படி பேசிட்டு.. விருதுநகரில் நடந்த அந்த ரகசிய சமரசம் என்ன
சென்னை: விருதுநகர் லோக்சபா தேர்தல் சூழலில் விஜயபிரபாகரன் - மாணிக்கம் தாகூர் - காங்கிரஸ் கூட்டணி அரசியல் தற்போது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது..2024 தேர்தல் வழக்கு, தி.மு.க. கூட்டணி நிலை, காங்கிரஸ் ஆதரவு விவகாரம் என தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.. அத்துடன் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற பழமொழிக்கு சான்றாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி தற்போது ஒரு சுவாரஸ்யமான போர்க்களமாக மாறியிருக்கிறது. அது என்ன?
கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் விஜயபிரபாகரன் களம் கண்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இதில் மிக மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார்..

விருதுநகர் தேர்தல்
தேர்தல் முடிவுகள் விஜய பிரபாகரனுக்கு சாதகமாக வராவிட்டாலும்கூட, அவர் பெற்றிருந்த வாக்குகள் அரசியல் விமர்சகர்களை ஆச்சரியப்பட வைத்ததை இங்கு நாம் சொல்லியாக வேண்டும்..
"வெற்றி பறிக்கப்பட்டது" என்ற பிரேமலதா அன்று பிரஸ்மீட்டில் சொன்ன குற்றச்சாட்டு, தொண்டர்களிடையே ஒருவித அனுதாப அலையை அந்த நேரத்தில் தூண்டவே செய்தது.. அதுமட்டுமல்லாமல், அந்த வெற்றியை ஏற்க மறுத்த விஜயபிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த சட்டப் போராட்டம் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
விஜயபிரபாகரன் - விஜய்க்கு அட்வைஸ்
இதனிடையே தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவருக்கும் காங்கிரஸுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகின. அப்போது மேடைகளில் பேசிய விஜயபிரபாகரன், "விஜய் அண்ணா விழுந்திடாதீங்க, காங்கிரஸை நம்பாதீங்க, அவங்க எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்கு அனுபவ ரீதியாகத் தெரியும்" என்று விஜய்க்கு நேரடியாகவே அட்வைஸ் செய்திருந்ததும் நினைவிருக்கலாம்.
ஆனால், காலம் இப்போது ஒரு விசித்திரமான சூழலை உருவாக்கியுள்ளது. ஆம், அரசியல் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. அதே கூட்டணியில் காங்கிரஸும் அங்கம் வகிக்கிறது. இதனால், அன்று யாரை நம்ப வேண்டாம் என்று மற்றவர்களுக்கு உபதேசம் செய்தாரோ, இன்று அதே காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு விஜயபிரபாகரன் தள்ளப்பட்டுள்ளார்.
மாணிக்கம் தாகூர்
அதுவும், தான் எதிர்த்த மாணிக்கம் தாகூருடன் இணைந்தே பிரசாரம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு விஜய பிரபாகரன் இன்று ஆளாகியுள்ளார்.
இந்தக் கூட்டணியில் இன்னொரு சிக்கலாக உருவெடுத்துள்ளது பழைய நீதிமன்ற வழக்கு தான். விஜயபிரபாகரன் தனக்கு எதிராகத் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றால் மட்டுமே தேர்தலில் முழு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்று மாணிக்கம் தாகூர் தரப்பினர் பிடிவாதம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஒருபுறம் தேர்தல் வெற்றித் தேவை, மறுபுறம் கவுரவப் பிரச்சனை என தேமுதிக கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
கேஸ் வாபஸ் வாங்குவாரா
விஜயபிரபாகரனின் இந்தத் தலைகீழ் மாற்றத்தை தற்போது தவெக தொண்டர்கள் சோஷியல் மீடியாவில் கடுமையாகக் கிண்டலடித்து வருகிறார்களாம்.. "அன்று விஜய்க்கு அறிவுரை சொன்னவர், இன்று அதே காங்கிரஸிடம் சரணடைந்தது ஏன்?" என்றும் கேள்விகளை எழுப்ப துவங்கி உள்ளார்களாம்..
ஆக, தத்துவங்களை விடத் தேர்தல் வெற்றிகளே முக்கியம் என்ற நிதர்சனத்தை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. விருதுநகர் தொகுதியின் இந்த அரசியல் நாடகம் வாக்காளர்கள் மத்தியில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்து போகிறது தெரியவில்லை.. ஆனால், கடந்த முறை நேருக்கு நேர் மோதியவர்கள், இன்று கைகோர்த்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்!!!












Click it and Unblock the Notifications