ஆ.. "அந்த" 4 பேர் இவங்களா.. ஐஏஎஸ் இறையன்பு ரூமுக்கு கிட்டயே.. மலைத்த திமுக.. ஆமா துணை முதல்வர் யார்?
சென்னை: தலைமை செயலகத்தில் உதயநிதி ஸ்டாலினுக்காக பிரத்யேகமான அறை தயாராகிவிட்டது.. அந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டுமிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டுமல்லாது, தமிழகம் முழுக்கவும் சுழன்று சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டது அனைவரையும் கவர்ந்தது.. அதுமட்டுமல்ல, திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரமும் ஒரு காரணமாக அமைந்ததை மறுக்க முடியாது.
பக்கம் பக்கமாக பேசாமல், அறிக்கைகளை விடாமல், பாயிண்ட் பாயிண்ட்டாக எதிர்க்கட்சிகளை விமர்சிக்காமல், இயல்பாகவும், கேஷூவலாகவும், எதிர்தரப்பு விமர்சித்து உதயநிதி செய்த விமர்சனம் பல தரப்பு மக்களையும் கவர்ந்தது.
செங்கல்
சில இடங்களில் பேசாமலேயே, ஒரே ஒரு செங்கல்லை உயர்த்தி காட்டியே தன் பிரச்சாரத்தை அசரடித்தார்.. சொந்த தொகுதியில் இவர் மேற்கொண்ட நலத்திட்ட பணிகள் பலரையும் வியக்க வைத்தது.. இதற்கு பிறகுதான், உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்ற பேச்சு மெல்ல தலைதூக்க தொடங்கியது.. நாளைய தினம் உதயநிதி அமைச்சராக பதவியேற்க போகிறார்.. கடந்த 4 நாட்களுக்கு முன்பேயே, உதயநிதிக்காக அறைகள் ஒதுக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டது.. தலைமை செயலத்தில் அமைச்சர்களுக்கு தரை தளம், முதல் மாடி, 2-வது மாடி, 3-வது மாடிகளில் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு இலாகா வாரியாக அமைச்சர்கள் அந்த அறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஜரூர் ஸ்பீடு
அந்தவகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமை செயலகத்தில் 10-வது கேட் நுழைவு வாயில் அருகே உள்ள அறை வேகமாக தயாரானது.. 2-வது மாடியில் ஒரு அறை முழு வீச்சில் புதுப்பிக்கப்பட்டது.. உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அவருக்காக இதில் ஒரு அறை ஒதுக்கப்படலாம் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இப்போது உதயநிதியின் அறை ஜரூர் வேகத்தில் தயாராகிவிட்டது.. இந்த அறை, இரண்டாவது மாடியில் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் ரூமுக்கு அருகிலேயே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
4 போட்டோகள்
இப்போது, அந்த பணிகள் எல்லாம் நிறைவடைந்துள்ள நிலையில் அது தொடர்பான போட்டோக்களும் வெளியாகியுள்ளன... உதயநிதிக்காக தயாராகியுள்ள ரூமில், அவரது இருக்கைக்கு பின்புறம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் போட்டோக்கள் வைக்கப்பட்டுள்ளன.. இவ்வளவு ஏற்பாடுகளும் நடந்துள்ள நிலையில், உதயநிதிக்கு என்ன இலாகா என்றுதான் தெரியவில்லை.. ஆனால், துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்பார் என எதிர்பார்ப்பதாக பொன்முடி தெரிவித்துள்ளதால், எதிர்பார்ப்புகள் எகிறி கொண்டிருக்கின்றன.
துணை முதல்வரா?
பொன்முடி பேசும்போது, "பல பொறுப்புகளை உதயநிதி பெறுவார்.. அவருக்கு அமைச்சர் பதவி தர வேண்டாம் என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. அவருக்கு தாமதமாக தருகிறார்கள் என்றுதான் சொல்கிறோம்.. வாரிசு அரசியல் செய்யக்கூடாது என்று எங்காவது சட்டம் இருக்கிறதா என்ன? இப்போதுள்ள அரசியலில் பத்து சதவீதம் பேர் வாரிசுகள்தான்... வாரிசு அரசியல் எல்லா கட்சியிலும்தான் இருக்கிறார்கள்.. அதில் ஒன்றும் தவறில்லை.. உதயநிதி துணை முதல்வராக விரைவில் பொறுப்பேற்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார் பொன்முடி.
டெபுடி முதல்வர்
உதயநிதிக்கு என்ன இலாகா ஒதுக்கப்படும் என்று விவாதங்களும் அனுமானங்களும் கிளம்பி வரும்நிலையில், சீமான் இன்று ஒரு பேட்டி தந்துள்ளார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதில் அளித்து பேசிய சீமான், "உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை. சொல்லப்போனால் இது எதிர்பார்த்த ஒரு முடிவுதான்.. இன்னும் சொல்ல போனால் அவர் விரைவில் துணை முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது. அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" என்று சீமான் சொல்லி உள்ளார்.. சீமானின் அந்த ஆரூடமும் திமுக களத்தில் உற்சாகத்தை தந்து கொண்டிருக்கிறது.