கனமழை நீடிப்பு : செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறப்பு
கனமழை காரணமாக ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதலே கனமழை பெய்து வருவதால் ஏரிகளில் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. மிகப்பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கம்,புழல் ஏரிகள் நிரம்பத் தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பெய்த சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த பெருமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிக்கவே, திடீரென செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவிலான நீர் திறக்கப்பட்டது. அடையாற்றில் ஏற்கனவே வெள்ளம் சென்ற நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து ஏரி நிரம்பியதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. படிப்படியாக அதிகரிக்கப்பட்ட தண்ணீர் திறப்பினால் அடையாறில் வெள்ளம் ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக உபரி நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
கடந்த பல வாரங்களாக ஓய்ந்திருந்த மழை நள்ளிரவு முதல் கொட்டி வருகிறது. அதிகாலை நேரத்தில் மழையின் வேகம் அதிகரித்தது. கடந்த 10 மணி நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் 7 செமீ மழை வரை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருவதால் பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்வரத்து 2,162 கன அடியாக உள்ளது. ஏரியில் நீர் இருப்பு 3,132 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்த நீர் இருப்பு 24 அடி என்கிற நிலையில் ஏரியின் நீர் மட்டத்தை 22 அடியில் நிலையாக வைக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
விடிய விடிய கொட்டி வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் 23 அடியை எட்டியதால் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியில் இருந்தும் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.