'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை.. இதுவரை ஆறு மாவட்டங்களில் 549 மனுக்களுக்கு முழு தீர்வு
சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ், இதுவரை ஆறு மாவட்டங்களில் 549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது திமுக சார்பில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'' என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும் இருந்து புகார்கள் பெறப்பட்டன.
மேலும், திமுக ஆட்சி அமைந்ததும் இந்தப் பிரச்சினைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் ஸ்டாலின் பிரசாரத்தின்போது அறிவித்திருந்தார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
இதில் மாநிலம் முழுவதும் இருந்து நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு, இந்தப் புகார்களுக்குத் தீர்வுகளைக் காண "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. அதற்கான சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார், தற்போது பெறப்பட்ட மனுக்களை வலைத்தளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு
இந்நிலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ், 549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின் கீழ், பெறப்பட்ட 4 இலட்சம் மனுக்களில் 70000 மனுக்கள் TNeGA வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பயனாளிகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. 549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருக்கிறது. பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினேன்!" என பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு புகாரும் தனி அடையாள எண்
தமிழக அரசு இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெறப்பட்டுள்ள ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி (SMS) மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள்.
|
6 மாவட்டங்கள்
இதுவரை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பத்து பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு முதல்வர் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications