நாடு முழுக்க.. கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை பாதியாக சரிவு.. பற்றாக்குறையால் மக்கள் அவதி
சென்னை: இந்தியாவில் தினசரி கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஜூன் 21-ம் தேதி அடைந்த உச்சத்துடன் ஒப்பிட்டால், 50 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.
ஜூன் 21 அன்று ஒரு நாளில் 87 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி எண்ணிக்கை ஏறும் என நினைத்தால் இறங்கத் தொடங்கியுள்ளது.
இப்போது, தினசரி தடுப்பூசி விகிதம் திங்கள்கிழமை நிலவரப்படி வெறும் 40 லட்சத்திற்கு குறைந்துள்ளது.

சாதனை அளவுக்கு பிறகு சரிவு
ஜூன் 21 ஆம் தேதி பதிவுசெய்யப்பட்ட 87 லட்சம் தடுப்பூசிகளில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கு உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட சில மாநிலங்களில் பதிவானது. சாதனை அளவை காண்பிக்க பாஜக ஆளும் மாநிலங்கள் அன்று ஒரே நாளில் அதிக தடுப்பூசிகளை செலுத்தியதாகவும், அதற்கு மறுநாள் தடுப்பூசி எண்ணிக்கை குறைந்ததாகவும் கூட குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இப்போது வரும் புள்ளி விவரங்கள் தடுப்பூசி பற்றாக்குறையால் நாடு தத்தளித்து வருவதை காட்டுவதாக அமைந்துள்ளன.

தமிழக அமைச்சர் டெல்லி பயணம்
கடந்த வாரம், திங்களன்று, 52.76 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது, செவ்வாய்க்கிழமை 36.51 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. இது புதன்கிழமை 27.6 லட்சமாக குறைந்தது. தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் இல்லாத நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் டெல்லிக்கு சென்று தடுப்பூசிகள் வழங்கவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம், கோரிக்கை விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தடுப்பூசி இயக்கம்
நாடு தழுவிய கோவிட் -19 தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. முதல் கட்டத்தில், சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற அத்தியாவசிய முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மார்ச் 1 முதல் தொடங்கப்பட்ட 2 ஆம் கட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 45-59 வயதுக்குட்பட்ட இணை நோயுற்றவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டனர். ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மக்கள் ஆர்வம்
மே 1 முதல், கோவிட் -19 தடுப்பூசி கட்டம் 3ஐ அரசு அறிவித்தது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி பெற தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டனர். ஆனால், மக்கள் ஆர்வம் காட்டும் அளவுக்கு ஏற்ப தடுப்பூசி வாங்கப்படவில்லை என்பதுதான் இந்த நிலைக்கு காரணம்.












Click it and Unblock the Notifications