பணி நீக்கப்பட்ட 7 மாற்றுத் திறனாளி கணினி ஆசிரியர்கள்.. பணி வழங்க முதல்வரிடம் உருக்கமான கோரிக்கை
சென்னை: கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு மீண்டும் கணினி பயிற்றுநர் பணியிடம் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து சிவகுமார் ( மொபைல் எண்-9486201667), ரியாஸ் பாஷா (மொ.எண்-9042310125), சுரேஷ், முத்து செல்வன், கண்ணன், உதயகுமார், தேவன் ஆகிய 7 மாற்று திறனாளிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது: வணக்கம்!! 2008 ம் ஆண்டு 1880 புதிய கணினி பயிற்றுநர் பணியிடங்கள் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டு அதற்காக சிறப்புத் தேர்வுகள் 12.10.2008-ல் TRB மூலம் நடத்தப்பட்டு அதில் 1880 பள்ளிகளில் பணிபுரிந்த நாங்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டோம். அதில் மொத்தம் 1687 பேர் வெற்றி பெற்று 10.11.2008ல் காலமுறை ஊதியத்தில் பணியில் சேர்ந்தோம்.
ஆனால் ஒரு சிலர் தொடுத்த வழக்கின் காரணமாக 1687 பேரில் 50 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மறுதேர்வு 24.01.2010ல் நடத்தப்பட்டது. அதில் சொற்ப அளவிலேயே தேர்ச்சி பெற்றனர். மறுதேர்வின் அடிப்படையில் 792 கணினி பயிற்றுநர்களை பணிநீக்கம் செய்வதாக 30.04.2010 அன்று பணி நீக்க ஆணை பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில் 30 வினாக்கள் தவறு என கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, பணிநீக்க ஆணைக்குத் தடை பெறப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தோம். 24.10.2010 அன்று நடைபெற்ற தேர்வில் சுமார் 29 வினாக்கள் தவறாக உள்ளதென சென்னை உயர்நீதி மன்றம் 20.12.2012 தீர்ப்பு வழங்கியது. மேலும் தவறான 29 வினாக்களில் 20 வினாக்களை மட்டும் எடுத்தக்கொண்டு அந்த 20 வினாக்களை நீக்கம் செய்து 130 வினாக்களுக்கு மதிப்பீடு செய்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
ஒரே தேர்விற்கு விநோதமாக இரண்டு விதமான மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. அதிலும் 7 வினாக்கள் சரியா தவறா என எந்த வித முடிவும் எடுக்காமலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த விநோதமான தேர்வு முடிவுகளில் மிக சொற்பனான சிலரே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த விநோதமான தேர்வு முடிவுகளில் மிக சொற்பமான சிலரே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தோல்வி அடைந்தவர்கள் 652 பேர். தேர்வு முடிவுகளை எதிர்த்து உச்சநீதி மன்றம் தமிழக அரசை அணுகி கோரிக்கை வைத்து நிவாரணம் வாங்கிக் கொள்ளுங்கள் என கைவிரித்து விட்டது. அதனால் 27.07.2013ல் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் 9பேர் உட்பட மொத்தம் 652 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டோம்.
மாற்றுத்திறனாளிகளான எங்கள் 7 நபர்களின் நியாயமான கோரிக்கைகள்:
1.நாங்கள் 10 முதல் 14 ஆண்டுகள் வரை பணிபுரிந்து இதுதான் எங்கள் வாழ்வாதாரம் என நம்பிக்கை வைத்து முழுமனதுடன் கடமை ஆற்றியிருந்த நேரத்தில் திடீரென எங்களை பணிநீக்கம் செய்தது கடந்த கால அரசு. எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கி விட்டது. எங்களை நம்பி இருந்த எங்களின் குடும்பங்கள் சொல்ல முடியாத துன்பத்தால் தவியாய் தவித்துவருகின்றோம்.
2.மேலும் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு தேவையான முழுகல்வித் தகுதியையும் பெற்றுள்ளோம். அதற்கான சான்றிதழ்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
3.ஆசிரியர் பணியே அறப்பணி என்று பணியாற்றிய எங்களுக்கு தற்போது வயது 40-50 க்கு மேல் ஆகிவிட்டபடியால், இனிமேல் எந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கும் வேலைக்குச் செல்ல முடியாத (மாற்றுத்திறனாளிகள் என்பதால்) சூழல் ஏற்பட்டுள்ளது.
4.மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மாநில அரசுப் பணிகளில் 3% இடஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. எங்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படாமல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
5.தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள அரசாணை (நிலை)எண். 151 நாள் 16.10.2008 ன் படி அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என மேற்காண் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசானையையும் கவனத்தில் கொள்ளாமல் நாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
எனவே மேற்காண் எங்களின் (மாற்றுத்திறனாளிகளின்) நியாயமான கோரிக்கைகளைக் கடந்த ஆட்சியின் கவனத்திற்குப் பல முறை கொண்டு சென்றபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதற்கு முழுகாரணம் கடந்த திமுக ஆட்சியில் பணி அமர்த்தப்பட்டோம் என்பதே. டாக்டர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் வழங்கப்பட்ட பணி கடந்த ஆட்சிக்காலத்தில் பறிக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளாகிய நாங்கள் கடந்த 8 வருடங்களாக குடும்பத்துடன் வறுமையிலும் மன உளைச்சலாலும் தமது பொற்கால ஆட்சிக்காக காத்துகிடக்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்குப் பல்வேறு நன்மைகள் செய்துவரும் தங்கள் ஆட்சி பேரறிஞர் அண்ணா வழியிலும் டாக்டர் கருணாநிதி வழியிலும் வெற்றி நடைபோட்டு வருவதை நாங்கள் கண்கூடாகப் பார்த்துவருகின்றோம்.
மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் தாங்கள் எங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மேலும் எங்களையே நம்பியிருக்கும் எங்களின் குடும்பங்களையும் கருத்தில் கொண்டு மீண்டும் எங்களை கணினி பயிற்றுநர் பணியிடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டுமாறு தங்களிடம், வணங்கி வேண்டி கேட்டுக்கொள்கிறோம். நாங்களும் எங்களின் குடும்பங்களும் தங்களை எங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து போற்றி வணங்குவோம் என்பதை மெத்த பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள பணியிழந்த மாற்றுத்திறனாளி கணினி பயிற்றுநர்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக்கையும்.












Click it and Unblock the Notifications