தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. அனைத்து கட்சி எம்எல்ஏக்களை கொண்ட.. சட்டமன்ற ஆலோசனை குழு அமைப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் இப்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் வரும் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து தேவையான ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள 13 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் சி விஜய பாஸ்கர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல ஏ எம் முனி ரத்தினம் (காங்கிரஸ்), ஜி கே மணி (பாமக), நயினார் நாகேந்திரன் (பாஜக), மருத்துவர் சதன் திருமலை குமார் (மதிமுக) எஸ் எஸ் பாலாஜி (விசிக) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல, நாகை மாலி (சிபிஎம்), ராமசந்திரன் (சிபிஐ), ஜவாஹிருல்லா(மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), பூவை ஜெகன் மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆலோசனைகள் பெற இந்தக் குழு அவ்வப்போது கூடி விவாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் செயலராக பொதுத்துறைச் செயலர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications